ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட் ஒருவர், முன்னணி தொழிலதிபரான அனில் அம்பானியின் வருமானம் மற்றும் அவர் செலுத்தியுள்ள வருமான வரி போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில், அவரது வருமான வரி ரிட்டர்ன்களை இ-ஃபைலிங் செய்யப்பட்டுள்ள அக்கவுன்ட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள மனோஜ் தாகா & கம்பெனி என்ற நிறுவனத்தில், தனது சார்ட்ட்ட் அக்கவுன்டன்சி ஆர்ட்டிக்கிள்ஷிப்பில் ஈடுபட்டு வந்த இந்த 21 வயது இளம்பெண், முதற்கட்ட விசாரணைக்குப் பின் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று தகவல் தொழில்நுட்ப சட்டத்தோடு இயைபுடைய அனைத்துப் பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படும் ஆபத்தில் சிக்கியுள்ளார்.
"இப்பெண் அம்பானியின் வருமானம் மற்றும் அவர் செலுத்திய வருமான வரி ஆகியவற்றை அறிந்து கொள்ளும் நோக்கில், இத்தொழிலதிபரின் வருமான வரி ரிட்டர்ன்கள் இ-ஃபைலிங் செய்யப்பட்டுள்ள அக்கவுன்ட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் (ஏடிஏஜி) சேர்மனாகிய அனில் அம்பானியின் அக்கவுன்ட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பின், அப்பெண் அவரது வருமானம், அவர் செலுத்திய வரித்தொகை, பான் கார்டு போன்ற பல்வேறு தகவல்களை திரட்டியதோடல்லாமல், அவரது இ-அக்கவுன்ட் இருக்கும் ஐடி வெப்சைட்டுக்குச் சென்று அவரது பாஸ்வேர்டையும் இருமுறை மாற்றியுள்ளார்." என்று இவ்வழக்கை விசாரித்து வரும் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
போலீஸாரின் கூற்றுப்படி, 54 வயதான அம்பானியின் தனிப்பட்ட வரி தகவல்களை தாக்கல் செய்து வரும் மும்பையில் உள்ள ஒரு சார்ட்டட் அக்கவுன்டன்ட் நிறுவனத்துக்கு, ஐடி துறையிடம் இருந்து இத்தொழிலதிபரின் இ-அக்கவுன்ட்டை அவரது வேண்டுகோளுக்கிணங்க மாற்றியுள்ளதாகத் தெரிவித்த ஒரு இ-மெயில் ஜூன் 26 ஆம் தேதியன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஜூலை 12 ஆம் தேதியன்று இரண்டாவது முறையாக பாஸ்வேர்டு மாற்றப்பட்டிருக்கும் தகவலைக் கொண்ட இ-மெயில் ஒன்றும் இந்நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
சந்தேகம் வலுக்கவே, ஏடிஏஜி குழுமத்தின் பிரதிநிதி மூலம், க்ரைம் துறையின் இணை போலீஸ் கமிஷனரான ஹிமன்ஷு ராய் அவர்களிடம் இது பற்றி புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. புகாரைப் பெற்றுக் கொண்ட அவர், சைபர் செல் இன்ஸ்பெக்டரான முகுந்த் பவாரை இந்த வழக்கை விசாரிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
"இ-ரிட்டர்ன் அக்கவுன்ட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இந்த சம்பவம், சைபர் க்ரைம் வகையைச் சேர்ந்த குற்றம் என்பது முதற்கட்ட விசாரணையிலேயே தெளிவாகத் தெரிந்ததனால், செப்டம்பர் 7 ஆம் தேதியன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்த விசாரணைகளின் போது, மனோஜ் தாகா & கம்பெனி நிறுவனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டரில் இருந்து இந்த அக்கவுன்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஒரு குழு அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தியதில் அப்பெண் அம்பானியின் அக்கவுன்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்." என்று திரு பவார் கூறியுள்ளார்.
இந்நிறுவனத்தில் உபயோகிக்கப்பட்டு வந்த சர்வர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த திரு.பவார் கூறுகையில், "இப்பெண்ணுக்கு எதிராக தொழில்நுட்ப மற்றும் பொருள் சார்ந்த ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன. தற்போது, ஹைதராபாத்தில் உள்ள இக்குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்." என்றும் தெரிவித்துள்ளார்.
பெயிலபிள் குற்றமாகிய இதை செய்த அப்பெண் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என்று மற்றொரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.