2013-2014ற்கான பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிடும் போது, "2013-2014இன் பொருளாதார வளர்ச்சி 5.3% ஆக இருக்கும்" என பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (பிஎம்ஈஏசி) சேர்மன் ரங்கராஜன் தெரிவித்தார். இதே குழு கடந்த ஏப்ரல் மாத பிஎம்ஈஏசி திட்ட அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவிகிதம் என குறிப்பிடப்பட்டது. 2012-2013 நிதியாண்டில் ஜிடிபி 5 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. மேலும் 4.8% ஆக இலக்கிடப்பட்டுள்ள நிதி பற்றாக்குறை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது என இந்த ஆலோசனைக் கவுன்சில் தெரிவித்தது.
ரூபாய் மதிப்பு உறுதி நிலை அடையும் வரை, ஆர்.பி.ஐ தற்போதைய நிதியியல் நிலைப்பாட்டை தொடர்ந்து சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என பிஎம்ஈஏசி குழு குறிப்பிட்டது. இந்த மாத துவகத்தில் டாலருடனான ரூபாயின் மதிப்பு 68.81 வீழ்ச்சியடைந்து நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருந்தது. தற்போது 63.07 என்ற வலுவான நிலையை எட்டியுள்ளது.
வெளியுறவுத் துறை பற்றி குறிப்பிடுகையில், ஒரு வருடத்துக்கு முன்னர் 88.2 பில்லியன் டாலராக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை (சிஏடி), இந்த நிதியாண்டில் 70 பில்லியன் டாலராக குறையும் என நம்பப்படுகிறது என டாக்டர் ரங்கராஜன் கூறினார்.
ரூபாய் பற்றி குறிப்பிடுகையில், "தற்போதைய ரூபாயின் நிலை சரிசெய்யப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி சந்தை உறுதியான நிலைக்குத் திரும்புகிறது. முதலீடுகள் நல்ல நிலைக்கு திரும்புவதாலும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையத் துவங்குவதாலும், ரூபாயின் நிலைபாடு பலப்படுத்தப்படும்" என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.