ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் கடல் கடந்த வர்த்தகத்தின் வசீகரம் ஆகியவற்றின் காரணமாக, பாரம்பரியமான தொழில் முனைவோர்களால் நடத்தப்படும் நிறுவனங்களான நல்லி பட்டுச் சேலைகள் மற்றும் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனங்கள் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தக சந்தையின் ஜம்பவான் இ-பேவின் மூலம் தனது ஆன்லைன் சேவைகளை துவக்கியுள்ளது. இந்நிறுவனங்கள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க இலக்கை எட்டும் நோக்கில் இந்த யோசனை செயல்படுத்தப்பட்டுள்ளது.
மந்தமான வளர்ச்சியுடன் காணப்படும் தற்போதைய பொருளாதார சூழலை தாக்குப்பிடிக்கும் வண்ணம் ஏற்றுமதி இலக்கினால் கிடைக்கக்கூடிய முழு பயன்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கில் பாரம்பரிய ஆடை மற்றும் ஆபரண நிறுவனங்களான இவை மட்டுமின்றி, இதர பல இந்திய நிறுவனங்களும் அவர்தம் பொருட்களை இ-பே சந்தையில் கடை பரப்பியுள்ளதாக, இ-பே இந்தியாவின், சில்லறை ஏற்றுமதித் துறையின் தலைவரான திரு நவீன் மிஸ்திரி கூறியுள்ளார்.
இ-பேவின் வணிக உத்திகள்
இந்த ஆன்லைன் சேவைக்குள் ஸைன்-அப் (Sign-up) செய்து கொள்வது மிகவும் எளிது - பொருட்களை பட்டியலிடுவதற்கு குறைந்த பட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கும் இ-பே, ஒவ்வொரு பொருளின் விற்பனையிலும் தனக்கு கமிஷன் எடுத்துக் கொள்கிறது.
திரு மிஸ்திரி, இ-பே
"எங்கள் வர்த்தக சேவையை உபயோகித்து, பொருட்களை சந்தைப்படுத்தும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 100 சதவீத வளர்ச்சியைக் காண்கிறோம். தற்போது பாரம்பரிய உடைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. அதனாலேயே நல்லி போன்ற நிறுவனங்கள் எங்களுடன் கைகோர்த்துள்ளன. வின்ட்டேஜ் பைக்குக்கான பாகங்கள் மற்றும் ரைடிங் கியர் போன்ற வாகன உதிரி பாகங்களும், தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன." என்று வெள்ளிக்கிழமையன்று நடந்த தி ஹிந்துவுடனான உரையாடலின் போது திரு மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
ராயல் என்ஃபீல்டு
இதற்கு உதாரணமாக, ராயல் என்ஃபீல்டு பைக்குகளைக் கூறலாம். இ-பே, நம்பத்தகுந்த மூன்றாம்-நபர் இ-பே விற்பனையாளர் ஒருவரை "வர்த்தக உதவியாளர்" ஆக நியமித்துள்ளதாகவும், இவரது அனுமதியின் கீழ் ராயல் என்ஃபீல்டு உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் திரு மிஸ்திரி கூறியுள்ளார்.
அவுட்சோர்ஸ் செய்ய விரும்பும் இ-பே
மேலும் அவர் கூறுகையில், "நிறுவனங்கள் சில விஷயங்களை அவுட்சோர்ஸ் செய்வதையே விரும்புகின்றன. அதிலும், ஏற்றுமதியை முழுமையாகவும், ஒழுங்காகவும் செய்யக்கூடிய வசதிகள் இ-பேவிடம் உள்ளது. இந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை மக்களிடம் அதிகம். இ-பே மூலம் செய்யப்படும் வர்த்தகத்தின் முலம் எந்த நேரத்திலும் நிகழக்கூடிய விற்பனை அல்லது சேவையைப் பற்றி விற்பனையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை." என்றும் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி மற்றும் சுங்க வரி
இ-பேயின் விற்பனையாளர்களும் சில நேரங்களில், இறக்குமதி வரி மற்றும் சுங்கவரி செயல்திட்டம் ஆகியவற்றினால், சில பிரச்சினைகளை சந்திக்கவே செய்கிறார்கள். குறிப்பாக, தொழில்முனைவோர், சிறு மற்றும் பெரும் வணிகர்கள், ஏற்றுமதி செய்யப்பட்ட அவர்களது பொருட்களை வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கும் போது மிகப் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.
ஏற்றுமதில் ஏற்படும் பிரச்சனை
"ஒரு இந்திய விற்பனையாளர் அவரது பொருட்களை ஏற்றுமதி செய்த பின், நுகர்வோர் அதனை திருப்திகரமாக இல்லயென்று கூறி, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் போது, அதற்கு ஏற்றுமதி கட்டணம் விதிக்கப்படுகிறது. சுங்க அதிகாரிகள் இந்த புதிய வகை ஏற்றுமதியை அங்கீகரிப்பதில்லை." என்று திரு மிஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
வணிகர்களின் கண்ணோட்டம்!!
"ஒவ்வொரு பொருளும் ஈட்டித் தரக்கூடிய லாபத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஒரு வணிகருக்கு, அவரது பொருள் சுங்கத்துறையில் மாட்டிக் கொள்வதென்பது பெரிய அடியாக விழுகிறது. பெரும்பாலான நேரங்களில், திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட பொருளுக்கு வரி செலுத்துவதைக் காட்டிலும் புதிய பொருளை வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்பதையே அவர்கள் விரும்புகின்றனர்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.