சென்னை: கார் மற்றும் நுகர்பொருள் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) குறைத்துள்ளது. மேலும் பண்டிகைக் காலங்களில் இதற்கான செயலாக்க கட்டணங்களையும் குறைக்க முடிவு செய்துள்ளது.
பி.என்.பி, ஓ.பி.சி மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கிகளைத் தொடர்ந்து, மோட்டார் வாகன கடன்கள் மற்றும் தொலைக்காட்சிகள், ஏர்கன்டிஷனர்கள், குளிர்சாதனப்பெட்டிகள் போன்ற நுகர் பொருள் கடன்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு வட்டி விகிதங்களை வழங்கும் நான்காவது வங்கியாக எஸ்.பி.ஐ உள்ளது. வட்டி விகிதங்களை குறைப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன், பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி வழங்க அரசு தீர்மானித்து ஒரு வாரத்திற்கு பின்னர், மோட்டார் வாகனம் மற்றும் நுகர்பொருள் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் தீர்மானம் வந்துள்ளது.
கார் கடன் மீதான வட்டி 0.20 சதவிகிதம் குறைத்து 10.75 சதவிகிதத்திலிருந்து 10.55 சதவிகிதமாக குறைக்கப்படும் என எஸ்.பி.ஐ கூறியுள்ளது. "கடன் தொகை மீதான செயலாக்கக் கட்டணம் 0.51 சதவிகிதமாக, அதாவது குறைந்த பட்சம் ரூ.1020 ஆக இருந்தது, இது பிளாட் ரேட் ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது" எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, நுகர்பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான சிறப்பு பண்டிகைக் கால கடன் வசதியையும் இந்த வங்கி துவங்கியுள்ளது. கவர்ச்சிகரமான தள்ளுபடி மற்றும் 12.05% முதல் பயனுள்ள வட்டி விகிதங்களும் வழங்கப்படுவதாகவும் இது அறிவித்துள்ளது.
இந்த வங்கியின் ‘உத்சவ் கி உமாங் எஸ்.பி.ஐ கே சாங்க்' என்ற பண்டிகைகால ஆபர் அக்டோபர் 7, 2013 முதல் ஜனவரி 31, 2014 வரை செல்லுபடியாகும், இதில் கார், இருசக்கர வாகனம் மற்றும் நுகர்பொருள் போன்றவை கொள்முதல் செய்ய முடியும் என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.