சென்னை: ரிவர்ஸ் மார்ட்கேஜ் (அடமான கடன்) வசதியை, மூத்த குடிமக்களைக் கவரக்கூடிய திட்டமாக மாற்றும் நோக்கில், அவர்களுக்கு சொந்தமான குடியிருப்பை அடமானம் வைத்து அதன் மூலம் பெறக்கூடிய மாத வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தற்போது ஆன்யூட்டி தொகைக்கு வரி விலக்கு அளிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீட்
டு வசதி வங்கியின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஆர்.வி.வர்மா கூறியுள்ளார்.
இந்த திட்டம், தேசிய வீட்டு வசதி வாரியம் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றினால் செயல்படுத்தப்படுகிறது. வருமான வரிப் பயன் மட்டுமல்லாது, ஓய்வு பெற்றோர் பயன்பெறும் வகையில், மாத வருமானம் அல்லது ஆண்டுத் தொகையானது குறைந்த பட்சம் மூன்று மடங்கு வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் சந்தை சுமார் 20,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை, இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் சுமார் 1,800 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், சுமார் 800 கோடி ரூபாய் வரை பட்டுவாடா செய்துள்ளதாகவும் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தியமைக்கப்பட்ட இத்திட்டம், சுமார் 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தனது வீட்டை அடமானம் வைத்த பின்னும், அவ்வீட்டின் சொந்தக்காரராக இருப்பதோடு, அவ்வீட்டிலேயே இருந்து கொண்டு, தன் வாழ்நாள் முச்சூடும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஆண்டு வருமான தொகையை, மாத வருவாயாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் தற்போது வழி செய்துள்ளது.
முன்னர், ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோனுக்கான காலக்கெடு, ரிவர்ஸ் மார்ட்கேஜர் மற்றும் அவருக்கு லோன் வழங்கக்கூடிய அங்கீகாரம் பெற்ற கடன் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாளிலிருந்து இருபது வருடங்களாக இருந்துள்ளது. ஆனால், தற்போது இக்காலக்கெடு, கடன் வாங்குபவரின் எஞ்சியுள்ள வாழ்நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ் (சிபிடிடி) வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு கூறுகிறது.
மேற்கூறிய இத்திருத்தத்தின் படி, லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) மற்றும் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டியில் (ஐஆர்டிஏ) பதிவு செய்துள்ள இதர இன்சூரர்கள், ஆன்யூட்டி சோர்ஸிங் நிறுவனங்களுள் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் படி, கடன் வாங்கியவர் இறந்து விட்டாலோ அல்லது அவர் அவ்வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற நேர்ந்தாலோ, வீட்டை விற்பதன் மூலம் கிடைக்கக்கூடிய தொகையைக் கொண்டு, கடன் தொகையானது அதுவரை சேர்ந்துள்ள வட்டியோடு திருப்பி செலுத்தப்படும். கடன் வாங்கியவர் அல்லது அவரது வாரிசுதாரர், வீட்டை விற்காமலேயே, தன் கைக்காசைக் கொண்டு கடன் தொகையை வட்டியோடு செலுத்தி மார்ட்கேஜ் லோனிலிருந்து விடுபட விழைந்தால், அதற்கும் அனுமதி வழங்கப்படுகின்றது.