வாஷிங்டன்: கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, அமெரிக்க அரசின் வரவு செலவு திட்ட பற்றாக்குறை ஒரு டிரில்லியன் டாலருக்கு கீழே குறைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் 1.09 டிரில்லியன் அளவிற்கு இருந்த பட்ஜெட் பற்றாக்குறை 2013 ஆண்டில் 680.3 பில்லியனாக குறைந்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் கூறியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில் 458.6 பில்லியன் டாலராக இருந்த பற்றாக்குறை, அதனையடுத்த ஐந்தாண்டுகளில் தற்போதுதான் ஒரு டிரில்லியனுக்கு கீழே குறைந்துள்ளது. இருப்பினும் தற்போதைய பட்ஜெட் பற்றாக்குறை அளவானது அமெரிக்க வரலாற்றில் ஐந்தாவது மிக பெரிய பற்றாக்குறையாக உள்ளது.
அரசாங்கத்தின் வரி வருவாய் மற்றும் அதன் செலவு இடையே உள்ள இடைவெளியே பட்ஜெட் பற்றாக்குறையாகும். செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த இந்த நிதியாண்டில் செலவு குறைந்து, வருவாய் உயர்ந்ததால் பற்றாக்குறை குறைந்தது.
அரசாங்கத்தின் வருவாய் 3.3 சதவீதம் உயர்ந்து 2.77 டிரில்லியனாகவும் அதிகரித்த வேளையில்,செலவு 2.4 சதவீதம் குறைந்து 3.45 டிரில்லியனாகவும் இருக்கிறது.
கடந்த ஆண்டில் பொருளாதாரம் சீரடைந்து, அதிக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டதால், அதிக வரி வருவாய் கிடைத்தது. மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒபாமா தலைமையிலான அரசு, சமூக பாதுகாப்பு வரியை தற்காலிகமாக வெட்ட முடிவு செய்தது. மேலும் பணக்காரர்கள் மீதான வருமான வரியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மார்ச் மாதம் பல்துறைகளிலும் செலவீனம் குறைக்கப்பட்டது.
ஒபாமா நிர்வாகமும் குடியரசு கட்சியினரும், பட்ஜெட் மற்றும் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் மீது விவாதத்தில் இழுபறியில் உள்ளனர். இந்தச் சண்டையின் ஊடாக, அக்டோபர் மாதம் 16 நாட்கள் அரசு செயலிழந்து போனது அனைவருக்கும் நினைவிருக்கும்.