மும்பை: இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் மும்பை-அஹமதாபாத் வழித்தடத்தில், அதி விரைவு இரயில்வே அமைக்கும் பணியின் சாத்தியக்கூறு பற்றி கூட்டாக ஆய்வு செய்யும் விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயூ) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர், மன்மோஹன் சிங் மற்றும் ஜப்பான் பிரதமர், ஷின்ஸோ அபே ஆகியோரின் கூட்டறிக்கையில், இந்த அதி வேக வழித்தடத்தின் சாத்தியக்கூறு பற்றிய ஆய்வுக்கு இரு தரப்பினரும் நிதியுதவி செய்யவிருப்பதாகக் இந்த ஒப்பந்த்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஜப்பான் தரப்பிலிருந்து ஜேஐசிஏ -வின் தெற்காசியப் பிரிவின் இயக்குனரான திரு.கட்சுவோ மட்சுமோட்டோ அவர்களும், இந்தியத் தரப்பிலிருந்து இரயில்வே அமைச்சகத்தின் உள்கட்டமைப்பு ஆலோசகரான திரு.கிரீஷ் பிள்ளை அவர்களும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த கூட்டு ஆய்வின் மூலம், மும்பை-அஹமதாபாத் வழித்தடத்தில், மணிக்கு சுமார் 300-350 கி.மீ. வேகத்துடன் கூடிய இரயில்வே அமைப்பு சாத்தியமா என்பது பற்றிய அறிக்கையை தயார் செய்வதே ஆகும். இந்த ஆய்விற்கான செலவை 50:50 என்ற விகிதத்தில் சரிபாதியாக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளவுள்ளன.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 18 மாதங்களுக்குள் முடிவடையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆய்வானது, போக்குவரத்து முன்கணிப்பு, இருப்புப்பாதை சுற்றாய்வுகள் ஆகியவற்றை மேற்கொள்வதோடு, அதி விரைவு இரயில்வே தொழில்நுட்பம் மற்றும் அமைப்பின் ஒப்பீட்டு ஆய்வையும் மேற்கொள்ளும்.