மும்பை: வெளிநாட்டு வங்கிகள் தனது கிளைகளை இந்தியாவில் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு வங்கிகள் தங்களுக்கு முழுவதும் சொந்தமான கிளைகளைத் தொடங்கவோ அல்லது இந்தியத் தனியார் வங்கிகளை வாங்கவோ முடியும்.
"வெளிநாட்டு வங்கிகளின் இந்திய கிளைகள், இங்கு உள்ள உள்நாட்டு வங்கிகளைப் போலவே செயல்பட அனுமதிக்கப்படும். மேலும் இத்தகைய பன்நாட்டு வங்கிகள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளைத் தொடங்க அனுமதியளிக்கப்படும். எனினும் நாட்டின் சில முக்கிய பகுதிகளில் கிளைகள் தொடங்க ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை" என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வங்கிகள் அந்நிய முதலீட்டின் கீழ் 74 சதவீதம் வரை தனியார் வங்கிகளின் மீது முதலீடு செய்யலாம். அந்நிறுவனங்களை உள்நாட்டு பங்குச்சந்தைகளில் பட்டியலிடவும் அனுமதியளிக்கப்படும்.
எனினும் இந்திய வங்கித் துறையில் வெளிநாட்டு வங்கிகளின் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்திய வங்கித் துறையின் மொத்த மூலதன மற்றும் சொத்து மதிப்பீட்டில் 20 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாட்டு வங்கிகளின் முதலீடு அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. மேலும் ஆரம்ப கட்ட முதலீட்டின் நிகர மதிப்பு ரூ.500 கோடியாக இருக்க வேண்டும் என்றும் மேலும் சில விதிமுறைகளுடன் வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் தனது கிளைகளை துவங்க அனுமதித்து உள்ளது.