மும்பை: பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் இந்திய ரிசர்வ் வங்கி முனைப்புடன் செயல்படுவதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மும்பையில் வங்கிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வங்கி மாநாட்டில் (Bancon 2013) கலந்து கொண்ட அவர் பேசுகையில் பணவீக்கம் சமுகத்தின் அனைத்து தரப்பினரையும், குறிப்பாக ஏழைகளை வெகுவாக பாதிப்பதாகவும் கூறினார்.
மேலும், பணவீக்கம் ஒருபுறம் முதலீட்டாளர், உற்பத்தியாளர் ஆகியோரிடையேயும், மறுபுறம் நுகர்வோர் மற்றும் சேமிப்பாளர் இடையே உள்ள வலுவற்ற நிலையை ஏற்படுத்துவதாகவும் கூறினார். மேலும் ஒருபுறம் அதிக பணவீக்கத்தின் காரணமாக சேமிப்பாளர் மிகக்குறைந்த வட்டியையே பெறமுடிகிறது, அதனாலேயே சேமிப்பு தங்கத்தை நோக்கி செல்கிறது என்றும், மறுபுறம் உற்பத்தியாளர்கள் மிக உயர்ந்த
வட்டி வீதங்களினால் தாங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளதாகவும் ராஜன் கூறினார்.
வட்டி வீதங்கள் உயர்த்தப்படும்
அண்மை தகவல்களின்படி, பணவீக்கம் கவலையளிப்பதாகவும் கூடிய விரைவில் கொள்கை வட்டி வீதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கக் குறியீடு
எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாக நுகர்வு விலை குறியீடு அல்லது சில்லறை வர்த்தக பணவீக்கக் குறியீடு 10 சதவீதம் கடந்துள்ளபோது மொத்த விலை குறியீடு 7 விழுக்காட்டிற்கு வந்துள்ளது முக்கியமாக, இவை இரண்டும் உணவு பணவீக்கத்தால் இயக்கப்படுகின்றன.
ராஜனின் நம்பிக்கை
எந்த ஒரு தனி தகவல் விவரமோ அல்லது எண்ணோ மத்திய வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்காது என திரு ராஜன் தெரிவித்தார். மேலும் பலவீனமான பொருளாதாரம், கரிப் மற்றும் ரபி அறுவடை பணவீக்கத்தை குறைக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்புவதாக ராஜன் தெரிவித்துள்ளார்.
6 - 12 மாத அவகாசம்
மத்திய வங்கியின் பணவீக்கத்தை குறைக்கும் முயற்சிகள் ஒரு நடுத்தர கால அவகாசம் அதாவது 6 முதல் 12 மாத காலத்தில் மட்டுமே பலனை எதிர்பார்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.