சென்னை: சென்னையில் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி துவங்கவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை நடத்த மாநில அரசின் பங்களிப்பாக ரூபாய் 2 கோடியை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த போட்டிகளின் பங்களிப்பில் உயரிய பிளாட்டினம் அந்தஸ்து பெற்றுள்ள மாநில அரசு, இந்த வருடம் மட்டுமல்லாது வரும் 2014, 2015 மற்றும் 2016 ஆம் வருடங்களில் நடக்கவிருக்கும் போட்டிகளிலும் அதிக அளவிலான பங்களிப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்தவருடம் இந்த நிதி உதவியை 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி அளவு உயர்த்தியதாக தெரிகிறது. இதுமட்டுமல்லாது இந்த போட்டிகள் நடைபெறவிருக்கும் அரங்கை சர்வதேச தரத்திற்கு உயர்த்த ஏற்கனவே 4.5 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5, 2014 வரை நடக்கவிருக்கும் சென்னை ஓபன், சர்வதேச டென்னிஸ் நிகழ்வான ஏடிபி டூர் (ATP Tour) எனப்படும் போட்டிகளின் அங்கமாக விளங்கும் இந்தியாவின் ஒரே போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த போட்டிகளில், பிரபல டென்னிஸ் வீரர்களான லியாண்டர் பேஸ்-மகேஷ் பூபதி ஜோடி, கார்லோஸ் மோயா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.