மும்பை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) நடப்பு ஆண்டிற்குள் தன்னுடைய வர்த்தக அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக ரூ.8,000 முதல் ரூ.9,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்கு முதலீட்டை க்யூஐபி (QIP) எனப்படும் தேர்ச்சிபெற்ற அமைப்புசார் அமர்வு முறை திட்டத்தின் மூலாமாக திரட்ட திட்டமிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில், "இந்த நிதி திரட்டும் முயற்சியானது அரசு ஏற்கனவே உட்செலுத்தியுள்ள ரூபாய் 2000 கோடிக்கும் மிகையான ஒன்று எனவும் மார்ச் மாதத்திற்குள் இப்பங்கு முதலீட்டை திரட்ட இலக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வங்கியில் அரசின் பங்கு 62 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் இவ்வங்கி இரண்டாம் நிலை பத்திரங்கள் மூலம் முதலீட்டை திரட்டும் எனவும் பட்டச்சார்யா தெரிவித்தார்.
எஸ்பிஐ-யின் போதுமான முதலீட்டு வீகிதம் (CAR) 11.69 சதவீதமும், முதன்மை தர முதலீட்டில் 8.73 சதவீதமாகவும் பாஸல்-2 விதிமுறைக்குட்பட்டும் உள்ளது.
இதன் பின்னணியில், தன்னுடைய இணை வங்கியை இணைத்துக்கொள்ளும் திட்டங்களை வகுக்கவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. முதலில் உள்சீரமைப்புகளை மேற்கொண்டு ஒரு உறுதியான அடித்தளம் அமைத்த பிறகு இணை வங்கிகளை இணைக்கும் பணிகளை முழு வேகத்துடன் தொடர்வோம் என அதன் தலைவர் தெரிவித்தார்.
அந்த வங்கியின் முன்னாள் தலைவர் பிரதிப் சௌதுரி, ஒரு இணை வங்கியினை இணைக்கத் திட்டமிட்டிருந்தபோதும் அவரின் பணிக்காலம் முடிவடைந்தது, இதனால் அந்த பணிகளை தற்போது அருந்ததி பட்டாச்சார்யா சிறப்புடன் செய்து வருகிறார். இப்போது ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவன்கோர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய ஐந்து இணைவங்கிகள் உள்ளன.