மும்பை: சுமார் 21 பில்லியன் யூரோ பெறுமானமுள்ள லோரியல் நிறுவனத்தின் ஒரு பகுதி தான் லோரியல் இந்தியா நிறுவனம். இந்நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 10-15 சதவீத வளர்ச்சியை தான் எதிர்பார்ப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்துள்ளது.
"2012ஆம் ஆண்டில் எங்கள் வருவாய் சுமார் 1, 600 கோடியாக இருந்தது. இந்திய சந்தையில் நாங்கள் 10-15 சதவீதம் என்ற இரண்டு இலக்க வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்," என்று லோரியல் இந்தியாவின், புரொஃபெஷனல் ப்ராடக்ட்ஸ் பிரிவின் தலைவரான அசீம் கௌஷிக் தெரிவித்துள்ளார்.
அழகு சாதனப் பொருட்களுக்கான உள்ளூர் சந்தையைப் பொறுத்தவரை, இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. நகர்ப்புற இந்தியாவில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான தொழில்முறை பராமரிப்புக்குரிய சந்தையின் அளவு, சுமார் 2,500 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு, ஏறத்தாழ 15 சதவீதம் என்ற அடிப்படையில் வளர்ந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
லோரியல் புரொஃபஷனல் ப்ராடக்ட்ஸ் பிரிவு, சரும பராமரிப்பிற்கென, கெராஸ்டேஸ் மற்றும் மாட்ரிக்ஸ் போன்ற பல்வேறு வகை பிராண்ட்களை வழங்குகிறது. மொத்தம் 400 வகையான இந்த ப்ராடக்ட்கள், சலூன்கள் வழியாக விற்கப்படுகின்றன. முடி பராமரிப்பிற்கான பிராண்ட்கள் பிரிவின் கீழ், ஆடம்பரமான பிராண்ட் ஆக அறியப்படும் கெராஸ்கின் (Keraskin) மற்றும் சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட செரைல் (Cheryl's)பிராண்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன.
"இந்த கையகப்படுத்துதலைத் தொடர்ந்து, உள்நாட்டு பிராண்டான செரைல்'ஸ், கூடிய விரைவில் இந்தியாவில் உள்ள லோரியலின் 35,000 சலூன்களில் மட்டுமின்றி, இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சலூன்களிலும் கிடைக்கும்," என்று கௌஷிக் குறிப்பிட்டுள்ளார்.
லோரியல், ஒவ்வொரு வருடமும் சுமார் 1,25,000 சிகை அலங்கார நிபுணர்களுக்கு, நாடெங்கிலும் உள்ள அதன் சலூன்கள், அதன் அகாடமிகளுள் 60 அகாடமிகள், மற்றும் ஸ்டூடியோக்களில் வைத்து பயிற்சியளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செரைல்'ஸ் பிராண்டை கையகப்படுத்திய பின், தாங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால், தொழில்முறை அழகு சாதனப் பொருட்களான இவற்றை சரியாகக் கையாள்வதற்கு பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டியிருந்தது தான் என்றும் கௌஷிக் குறிப்பிட்டுள்ளார்.