மும்பை: மத்திய பொருளாதார நுண்ணறிவு அமைப்பு (CEIB) நடப்பு நிதியாண்டின் அரையாண்டில், நாட்டில் சுமார் 3,000 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை கண்டறிந்திருப்பதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் இந்த நுண்ணறிவு அமைப்பு, பொருளாதார குற்றங்கள் தொடர்பான நுண்ணறிவு விவரங்களை பெறுவதிலும் வழங்குவதிலும் ஈடுபட்டு வருகிறது, இதுவரை 174 வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பண கடத்தல் வழக்குகளை ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் கண்டறிந்து பதிவுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்குகள் ரூபாய் 3,000.98 கோடி கறுப்புப் பணம் மற்றும் 386 கோடி ரூபாய் பெறுமானமுள்ள கலால், சுங்க மற்றும் சேவை வரி ஏய்ப்புகளை உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு அமைப்பு இது தொடர்பான விவரங்களை அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அமலாக்கப்பிரிவு அமைப்புகளிடம் பகிர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன.
அந்த அமைப்பு பல்வேறு சட்ட நிலைநாட்டும் நுண்ணறிவு அமைப்புகளிடமிருந்து 843 புகார்களை பெற்றுள்ளது என்றும், அவற்றில் 181 புகார்கள் சேவை வரி ஆய்வாளர்களிடத்திலும், 120 புகார்கள் நாடு முழுவதிலும் உள்ள வருவாய் நுண்ணறிவு இயக்குனராக அமைப்புகளிலிருந்தும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் தனி நபர் மற்றும் நிறுவன வரி ஏய்ப்பு வழக்குகள், ரூபாய் 3,000 கோடிக்கும் மேலானவை என்றும் இவ்வழக்குகளை தொடர்புடைய அரசு அலுவலகங்கள் பின் தொடர்ந்து வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன.
சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்யும் நிதி நுண்ணறிவு அமைப்பும் (FIU) கூட 33 சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை அறிக்கைகளை சமர்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் STR எனப்படும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை அறிக்கைகள் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடையதாக இருப்பின் அவை கருப்புப்பணம் உள்ளிட்ட குற்றங்களாக நம்பப்படுகின்றன.
CEIB அமைப்பு PPP எனப்படும் தனியார் ஈட்டுத் திட்டத்தின் மூலமாக அனுப்பப்பட்ட சுமார் 2,280 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத வருவாயையும் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. இத்திட்டம் கருப்புப்பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற ஒரு புதிய உக்தியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்களை பட்டியலிட முதல் பங்கு வெளியீடு செய்யும் முறைகளுக்கு எதிராக சில தனி நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ 50 பங்குகள் அல்லது பத்திரங்கள் வரை கொடுக்க முடியும்.
நிதி அமைச்சகம் வரி ஏய்ப்பு செய்வோர்களுக்கு கடும் எச்சரிக்கைகளை செய்வதுடன் வருவாய் இழப்பை சரி செய்ய ஒவ்வொரு முயற்சியும் செய்து வருகிறது.