மும்பை: வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தத்தவறும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் புகைப்படங்களை செய்தித்தாள்களில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரத்தில் நிவாரணம் வேண்டி, DJ எக்ஸிம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் VM கானடெ மற்றும் MS சோனாக் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, அவர்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.
பத்திரிக்கை செய்திகளின்படி, டிஜே எக்ஸிம் நிறுவனம், தான் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த தவறினால், அந்நிறுவன இயக்குநர்களின் புகைப்படங்கள் தேசிய செய்தித்தாள்களில் வௌயிடப்படும் என்று, பாரத ஸ்டேட வங்கி (SBI), அந்நிறுவனத்திற்கு அக்டோபர் 10ஆம் தேதி எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அந்நிறுவனம், புகைப்படங்களை வெளியிடுவதற்கு எந்தவொரு விதியும் இடமளிக்கவில்லை என்று வாதாடியது.
சட்டத்தில் இடம் இல்லை
மேலும் இரு தரப்பு வழக்கு அறிஞர்கள் வாதாடுகையில், இதுபோன்ற செயல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் விதிமுறைகளின்படி அவர்களின் பெயர் மற்றும் முகவரியை மட்டுமே வெளியிட முடியும் என்றனர்.
உண்மையை தானே சொன்னோம்
ஆயினும் எஸ்பிஐ (SBI) வங்கி சார்பில் வழக்கறிஞர் அப்சி ஷினாய் குறிப்பிடுகையில், மேற்சொன்ன அந்நிறுவனம் 53 கோடி கடன் தொகையை திருப்பி செலுத்தத் தவறிவிட்டது. ஆனால் இவ்வழக்கில் இது பிரச்சினைக்குரிய விஷயமில்லை. அந்நிறுவனத்தின் இயக்குநர்களே கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என்பதை ஒப்புக் கொண்டனர். நாங்கள் நடந்த இந்த உண்மையைத்தான் பொதுமக்களுக்கு தெரியப்பபடுத்துகிறோம் என்று வாதிட்டார்.
அனைவரும் இல்லை
மேலும் அவர் கூறுகையில், எங்கள் வங்கி இதுபோன்ற கடுமையான நடவடிக்கையை ஒவ்வொரு விவகாரத்திலும் எடுப்பதில்லை என்றார்.
விழிப்புணர்வுச் செயல்
இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், "புகைப்படங்களை பத்திரிக்கைகளில் பிரசுரிக்கும் செயலானது எதர்வரும் காலங்களில், கடன் பெறும் நிறுவனங்களுக்கு மத்தியில் விழிப்புணர்வையும், எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தும்" என்று தெரிவித்தது.
தடையில்லை....
மேலும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில், "எங்களைப் பொறுத்தவரை தவறு செய்வோரின் புகைப்படங்களை பிரசுரிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. வங்கிகள் அவ்வாறு செய்வதை தடுக்க எந்த சட்டரீதியான தடையும் இல்லை" என்றனர்.
மூத்த அதிகாரிகள் மட்டும்
இதுபோன்ற நடவடிக்கைகளை, வங்கியின் பொது மேலாளர் பொறுப்பிற்கு குறையாமல் உள்ள மூத்த அதிகாரிகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். இவ்விஷயத்தில் அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றனர்.