மும்பை: சேமிப்புக்கணக்கு மற்றும் வைப்பு நிதி வாடிக்கையாளர்கள் இனி வட்டியை சீக்கிரமே அதாவது 3 மாதத்திற்கு முன்னரே பெறலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பெரும்பாலான வங்கிகள் தற்சமயம் சேமிப்புக் கணக்குககளில் சேரும் வட்டியை 6 மாதத்திற்கு ஒருமுறை வரவு கணக்குகளில் வைக்கின்றன. இனிமேல் வங்கிகள் வட்டியை காலாண்டுக்கும் குறைவான காலத்தில் கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
முன்னிருந்த விதிகளின் படி உள்நாட்டு, குடியுரிமை அற்ற (NRO), குடியுரிமை அற்ற சிறப்பு (NRSR) மற்றும் வெளிநாட்டு இந்தியர்களின் (NRE) சேமிப்புகள் மற்றும் வைப்புகளுக்கான வட்டியை காலாண்டிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட கால அவகாசத்திலோ வங்கிகள் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும் தற்போது வங்கிகள் கோர் பாங்கிங் எனப்படும் மைய அடித்தளத்தில் செயல் படுவதால் பழைய விதிமுறைகளை மீண்டும் பரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இதன் படி, வங்கிகள் தற்பொழுது வட்டியை காலாண்டுக்கும் குறைவான கால அவகாசத்தில் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட அறிவுறுத்தல்கள் சாதாரண குடியுரிமை அற்ற (NRO) மற்றும் வெளிநாட்டு இந்தியர்களின் (NRE) சேமிப்புகள் மற்றும் வைப்புகளுக்கு பொருந்தும் என ஆர்பிஐ கூறியுள்ளது. ஒரு தனிப்பட்ட அறிவிப்பின் மூலம் RBI வங்கிகளுக்கு மூன்று வருடத்திற்கும் மேற்பட்ட குடியுரிமை அற்ற வளரும் வெளிநாட்டு வைப்பு தொகையில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி வட்டியை வழங்க உரிமை அளித்துள்ளது.