அலபாமா: அமெரிக்காவில் முதலீடு செய்த லக்ஷ்மி மிட்டலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நன்றி தெரிவித்தார். இதன் முலம் இருவரும் நல்ல நட்பு ஏற்பட்டது என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தது. இந்த நட்பின் அடையாளமாக லக்ஷ்மி மிட்டல் மேலும் ஒரு எஃகு (ஸ்டீல்) உற்பத்தி நிலையத்தை வாங்க முன்வந்துள்ளார்.
லக்ஷ்மி மிட்டலின் ஆர்சிலர் மிட்டல் நிறுவனம், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் கால்வெர்ட் என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் ஃதைஸன்க்ரப் (ThyssenKrupp) எஃகு நிறுவனத்தை 1.55 பில்லியன் டாலருக்கு நிப்பான் ஸ்டீல் அண்ட் ஸுமிட்டோமோ மெடல் (Sumitomo Metal) கார்ப்பரேஷனுடன் இணைந்து வாங்க இரு நிறுவனமும் திட்டமிட்டுள்ளது.
வருடத்திற்கு 5.3 மில்லியன் டன் அளவுக்குப் பலவகை எஃகு பொருட்களைத் தயாரிக்கும் இந்நிறுவனம், இந்த கையகப்படுத்தலுக்குப் பின் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்திற்கும் நிப்பான் ஸ்டீல் அண்ட் ஸுமிட்டோமோ மெடல் கார்ப்பரேஷனுக்கும் 50/50 என்ற அளவில் சொந்தமாகிவிடும். (நீ பாதி, நான் பாதி கண்ணே!)
60 மில்லியன் டாலர் தொகை, பங்கு மற்றும் கடன் பத்திரங்களின் மூலம் முதல் கட்டமாக இந்த கையகப்படுத்தலுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக, பிரேஸிலின் ரியோ டீ ஜெனிரோவில் உள்ள டிகே சிஎஸ்ஏ நிறுவனத்திடமிருந்து ஆண்டொன்றுக்கு 2 மில்லியன் டன் எஃகுப் பலகைகளை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சந்தை விலையில் வாங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டிகே ஸிஎஸ்ஏ நிறுவனம் விரும்பினால், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த உத்தரவாதம் நீட்டிக்கப்படும்.
இந்தக் கூட்டு நிறுவனத்துக்கு தேவைப்படும் மீதி எஃகுப் பலகைகளை அமெரிக்கா, பிரேஸில் மற்றும் மெக்ஸிகோவில் செயல்பட்டுவரும் ஆர்சிலர் மிட்டல் எஃகு ஆலைகள் தயாரித்து வழங்கும். புதிய கூட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் பொறுப்பை ஆர்சிலர் மிட்டல் ஏற்றுக்கொள்ளும். ஆர்சிலர் மிட்டல் வழங்கும் எஃகுப் பலகைகளுக்கான விலை, அவ்வப்போது சந்தை விலை, வாங்கும் அளவு மற்றும் புது நிறுவனத்தின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
அமெரிக்காவில் வாகனத் தயாரிப்புச் சந்தையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்கு, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய நிறுவனம் மிகப் பெரும் உதவியாக இருக்கும். அமெரிக்காவின் வாகனத் தயாரிப்புத் தொழிலுக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களின் பெரும்பகுதியை ஆர்சிலர் மிட்டல் நிறுவனமே வழங்கிவரும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் நாஃப்டா (North American Free Trade Agreement) வாகன சந்தையின் வாகன உற்பத்தி 15% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்நிறுவனத்துக்குப் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.
இதுமட்டுமின்றி, நாஃப்டாவின் ஆற்றல் துறையின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி, ஆய்வு, பரிமாற்றம் போன்றவற்றுக்குத் தேவைப்படும் பைப்புகளையும் ட்யூப்களையும் கூட தயாரித்து வழங்கி வரும் ஆர்சிலர் மிட்டல் நிறுவனம், இந்த கையகப்படுத்தலின் மூலம் இன்னும் அதிக பலத்துடன் செயல்பட முடியும். (கலக்குங்க பாஸ்...!)