மும்பை: குறு நிதி நிறுவனங்களின் கடன் பரிவர்த்தனைகளை சிறப்பாகவும், விரைவாகவும் கையாளுவதற்கு ஏதுவாக இந்தியக் கடன் மற்றும் நிதித் தகவல் அமைப்பு (சிபில்) விரைவில் குறு நிதித் தகவல் அமைப்பு ஒன்றை நிறுவ உள்ளதாக அதன் தலைவர் எம்.வி. நாயர் தெரிவித்துள்ளார்.
தனிநபர் கடன்களை வழங்குமுன் அரசு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சிபிலிடம் குறிப்பிட்ட தனிநபரின் நிதி நிலையையும் அதில் அவர் பெற்றுள்ள மதிப்புக் குறியீட்டையும் கோரும். சிபில் ஒவ்வொரு தனி நபருக்கும் 300 முதல் 900 (அதிக பட்சம்) புள்ளிகள் வரை அவர்களின் கடன் திரும்பச் செலுத்தும் முறைகளின் அடிப்படையில் வழங்கும். இந்த மதிப்பீடானது ஒவ்வொரு மாதமும் பதிவு செய்யப்படும். 800 புள்ளிகள் வரை பெறுபவர்களுடன் பரிவர்த்தனை செய்ய வங்கிகள் விழைகின்றன.

இந்த புதிய முயற்சியின் மூலம் சுமார் 5 கோடி குறுநிதி உறுப்பினர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக சிபில் தலைவர் நாயர் தெரிவித்தார் தற்போது சிபிலின் கீழ் நுகர்வோர், சில்லறை வர்த்தகம், அடகு மற்றும் மோசடி உள்ளிட்ட நான்கு அமைப்புகள் இயங்குகின்றன.
தற்போது, நுகர்வோர் அமைப்பில் 30.5 கோடி மற்றும் சில்லறை வர்த்தக அமைப்பில் 1.5 கோடி எண்ணிக்கையிலான தகவல்கள் 960 உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. குறுநிதி உறுப்பினர் தகவல்களை உள்ளடக்கிய பின் இதன் மொத்த எண்ணிக்கை 7 கோடியாக மாறும்.
நிதி நிலை மதிப்புக் குறியீடு அறிமுகப்படுத்திய பிறகு, வங்கிகளின் ஒட்டுமொத்த பயன்தரா சொத்துக்கள் அல்லது நிதி பரிவர்த்தனைகள் அளவு 2.5 விழுக்காட்டிலிருந்து 1 விழுக்காட்டிற்கும் குறைந்துள்ளது. இதே வேளையில், நாட்டில் ஒட்டுமொத்த உற்பத்தி விகிதத்தில் கடன் புகு விகிதம் 22 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காட்டிற்கும் மேலாக வளர்ந்துள்ளது.
நிதி நிலை மதிப்புக் குறியீட்டை பெரும்பாலான வங்கிகள் மற்றும் கடனாளர்கள் பயன்படுத்திய போதும், இது தொடர்பான புள்ளிவிவரங்களின் தரம் குறித்து நாயர் கவலை தெரிவித்தார். இந்த விவரங்களை உடனுக்குடன் பதிவு செய்வதால் பயன்தரா கடன்கள் மற்றும் கடன் மறுப்புச் சூழ்நிலைகள் வளர்வதை தவிர்க்க முடியும் என்று பொறுப்பாளர்களை கேட்டுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications