சென்னை: விளையாட்டு துறை, கல்வி துறை என அனைத்தும் இப்பொழுது வியாபாரம் செய்யும் தளமாக மாறியுள்ளது. குறிப்பாக இந்த ஐபில் வந்த பிறகு கிரிக்கெட் விளையாட்டின் வர்த்தகம் மிக பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த ஐபில் விளையாட்டில் இந்தியாவின் பொருளாதார தூண்கள் என போற்றப்படும் முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, கலாநிதி மாறன் போன்ற பெரும் வியாபாரிகளும் வியாபாரத்திற்காக களத்தில் குதித்துள்ளனர் என்பது மிகவும் வருந்ததக்கது. பெயர் வெளியிடாமல் பல பெரும் தலைகள் இதில் முதலீடு செய்துள்ளதாகவும் சில தகவல்கள் மிடியாகளிடம் கிடைத்துள்ளது.
பணம் கொழிக்கும் இந்தியன் பிரிமியர் லீகில் (IPL) போட்டிகளில் பெரிதாக லாபமோ, வெற்றியோ எதுவும் தராத அணிகளின் மேல் பெரிய நிறுவனங்களின் பார்வை இப்போது திரும்பியுள்ளது. இரும்பு எஃகு உற்பத்தி துறையின் முன்னணி தொழில்அதிபரான லக்ஷ்மி மிட்டல், ஜிஎம்ஆர் வசமிருக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியையும், ஆர்பிஜி குரூப், ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா மற்றும் மோஹித் பர்மான் வசமிருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும் வாங்குவதற்கு பரிசீலித்து வருவதாகத் தெரிய வருகிறது.
டெல்லி அணி சாதித்து என்ன???
மைதானத்திற்கு உள்ளேயும், மைதானத்திற்கு வெளியேயும் சொதப்புவதில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் டெல்லி டேர்டெவில் அணி கடந்த ஆண்டிலும் எதுவும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து அணி
இங்கிலாந்து கால்பந்து ஆட்டத்திற்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் குயின் பார்க் ரேஞ்சர்ஸ் என்ற அணியில் பங்குதாரராக (சைலன்ட் பார்ட்னர்) இருக்கும் லக்ஷ்மி மிட்டல், அந்த அணி சரியாக விளையாடாததால் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் இருந்து வெளியேற்றினார்.
அமித் ஷர்மா
இந்த கால்பந்து அணியில் தன் மருமகனான அமித் ஷர்மா மூலம் முதலீடு செய்தார். அதேபோல் ஐபிஎல் அணியையும் அவர் முலமாகவே வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
பஞ்சாப் அணியின் தலைவலி
தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வந்த பஞ்சாப் அணி, கடந்த ஆண்டு ஓரளவுக்கு விளையாடினாலும் ‘பரவாயில்லை பரந்தாமா!' என்றும் சொல்லும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. இதற்கிடையில் ஹர்பஜன்-ஸ்ரீசாந்த்தின் (அண்ணே! அவன் என்னை அறைஞ்சுட்டான்!) பிரச்சினையால் அணியின் பெயர் மக்கள் மத்தியில் டேமேஜ் ஆனதை இன்னும் சரி செய்ய முடியவில்லை. இப்படி ‘காருக்கு ஓனர் இப்ப யாரு?' என்ற ரேஞ்சுக்கு செய்திகளில் அடிபடுவது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குப் புதிதல்ல.
ப்ரீத்தி ஜிந்தா சியர்லீடரா??
2010 வாக்கிலேயே நெஸ் வாடியாவும், ப்ரீத்தி ஜிந்தாவும் தங்கள் பங்கை விற்கப் போவதாக பேசப்பட்டது. ஆனால் தன்னுடைய முயற்சியில் மனம் தளராத ப்ரீத்தி ஜிந்தா, அணியைக் கைவிடாமல் காப்பாற்றியதோடு, அவர்கள் விளையாடும்போது களத்திற்கு வந்து தன்னுடைய அழகான புன்னகையால் உற்சாகப்படுத்தினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அழகான சியர்லீடர் ப்ரீத்தி ஜிந்தா தான், இந்த அணிக்காக மறுபடியும் களத்தில் வந்து நிற்பாரா, மாட்டாரா என்பது வரும் ஏப்ரலில் தெரிந்துவிடும்.
ஷாருக் கானின் அலசத்தலான பதில்...
ஷாருக் கான் மற்றும் ஜெய் மேத்தாவுக்குச் சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் கூட முதலீட்டாளர்களின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. தன்னுடைய அணி தோற்கும் போது பயந்து போய் அதிலிருந்து விலகி ஓடுவது தன்னுடைய குழந்தைகளுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் ஷாருக் தன்னுடைய பங்கை விற்கப் போவதில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்(அப்படிப் போடு அருவாள...).
புதிய முதலீட்டாளர்களை தேடும் ஆர்ஆர்
ஆனால், எமர்ஜிங் மீடியாவின் மனோஜ் படேல், ஷில்பா ஷெட்டி மற்றும் அவர் கணவருக்குச் சொந்தமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விற்க அவர்கள் நல்ல முதலீட்டாளர்களைத் தேடி வருகிறார்கள் (எவனாவது ஒரு அடிமை சிக்காமலா போயிடுவான்...).