மும்பை: ஸ்மார்ட்போன்கள் வந்த பின்னர், அதன் பயன்பாடு மக்களிடையே கடந்த வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் மொபைல் பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இதனால் மொபைல் டேட்டா பயன்பாடு 220 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. "போன் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் போன் இல்லை" என்ற அளவுக்கு மொபைல் போன்களின் அதிக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த வருடம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் பெருவாரியாக உயர்ந்துள்ளது.
மொபிடியூட் 2013 என்ற அந்நிறுவனத்தின் கணக்கெடுப்பின் மூலமாக மொபைல் போன்கள் பயன்படுத்துவோரின் விருப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் 87 சதவிகித பயன்பாடு 3G வசதியுள்ள கருவிகள் மூலம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட பயன்பாட்டில், கூகுள் இணையதளம் தொடர்ந்து முன்னணியில் இருப்பதுடன், யூடியுப் மற்றும் பேஸ்புக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
ஸ்மார்ட் போன் பயன்பாடுகளை பொருத்தவரை இந்த கணக்கெடுப்பில், உபயோகிப்பாளர்கள் தாராளமான திரைகளைக் கொண்ட போன்களை விரும்புகின்றனர். 5.5 அங்குலத்திற்கும் அதிகமான திரையுள்ள போன்களின் பயன்பாடு 123 சதவிகிதம் வளர்ச்சியும் 3.5 அங்குலம் வரை திரை கொண்ட போன்கள் 30 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளன.
மொபைல் டிவி 400 சதவிகித வளர்ச்சி கண்டு மிகவும் விரும்பத்தக்க சேவையாகவும் அதனை தொடர்ந்து ஹலோ டியூன்ஸ், ஏர்டெல் ரேடியோ மற்றும் கரோக்கே ஆகியன விரும்பத்தக்க சேவைகளாகவும் இருந்தன.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை சந்தையிடுதல் அதிகாரி (நுகர்வோர் வர்த்தகம்) கோவிந்த் ராஜன் கூறுகையில் "மொபைல் போன்கள் அனைத்து வயதினருக்கும் மற்றும் பகுதியினருக்கும் தேவைக்கேற்ற வகையில் இன்றியமையாத 24 மணி நேர துணையாக உள்ளது. மொபிடியூட்2013 கணக்கெடுப்பு உபயோகிப்பாளர்களின் இந்த போக்கை பதிவு செய்வதோடு அவர்களுடைய விருப்பங்களையும் உபயோக வழக்கங்களையும் பற்றிய உண்மையான நிலவரத்தை வெளிக்கொணர்கிறது. இந்த முயற்சி சுமார் 19.4 கோடி மக்கள் ஆர்வமுடன் தங்களின் விருப்பங்களை பதிவு செய்தனர்" என்றார்.