மும்பை: இந்த புது வருடத்தில் நம்முடைய காச எடுக்கக் கூட காச கொடுக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. ஏடிஎம்-களில் இனி அதிக முறை பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். வங்கிகள் பணம் எடுக்கும் தவணைகளை எண்ணிக்கையில்ல அளவில் இருந்து ஐந்தாகக் குறைக்க முடிவெடுத்துள்ளன வங்கிகள். நீங்கள் உங்கள் வங்கி ஏடிஎம்மோ அல்லது பிற வங்கி ஏ டி எம்மோ, எதுவானாலும் கட்டணம் நிச்சயம். (என்ன கொடும சரவணன் இது!! )
தற்போது சொந்த வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்க உச்ச வரம்பு இல்லை. அதே வேளையில், பிற வங்கி ஏடிஎம் களில் 5 முறை பணம் எந்த கட்டணமுமின்றி எடுக்கலாம்.
இன்னும் இருக்கு... வங்கிகள் ஏடிஎம் பாதுகாப்பு செயற்குழுவிடம் ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணமானது 15 ரூபாயிலிருந்து 18 ரூபாயாக உயரவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இன்டெர்சேஞ் கட்டணம் எனப்படும் இது பரிவர்த்தனையை ஏற்கும் வங்கி வாடிக்கையாளர் வங்கிக்கு கார்டுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கு கொடுக்கும் கட்டணமாகும்.
பெங்களூரு சம்பவம்
சமீபத்தில் பெங்களூரில் கார்பொரேஷன் வங்கி ஏடிஎம்மில் நிகழ்ந்த கொலை முயற்சி மற்றும் கொள்ளை சம்பவத்தை அடுத்து ஏடிஎம்-களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் அதன் செலவினங்களை குறித்தும் ஆராய இந்த செயற்குழு அமைக்கப்பட்டது.
மக்கள் தான் பாவம்
இந்த குழுவின் மூலம் பெறப்பட்ட பரிந்துரைகளில் ஏடிஎம் சேவைகளை கட்டணத்திற்கு உள்ளாக்குதலும் ஒன்று. "இதன் விளைவாக வாடிக்கையாளர்களே இந்த செலவினத்தை ஏற்க நேரும்" என ஒரு அரசு வங்கி அதிகாரி தெரிவித்தார்.
பாதுகாப்பு.. அதிகரிப்பு..
காவலாளிகளின் மூலமான பாதுகாப்பை அதிகப்படுத்திவரும் அதே வேளையில், வங்கிகள் மின்னணு கண்காணிப்பு, தொலை உணர்வு கண்காணிப்பு ஆகியவற்றை அதிகப்படுத்தவும் முயன்று வருகின்றன. சில வங்கிகள் தொலைவிலுள்ள மிக குறைந்த உபயோகமுள்ள ஏடிஎம் மையங்களை பகுதி நேரமாக மூடவும் தொடங்கியுள்ளன.
விளம்பரம்!! ரொம்ப முக்கியம்..
ஏடிஎம் மையங்களில் வங்கி சேவைகள் அல்லாத பொருட்களின் விளம்பரங்களை வைக்க அனுமதி தரவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும் இது போன்ற திட்டங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்குப் பிறகே மேற்கொள்ளப்படும்.
ஒரு மாதத்திற்கு 40,000 செலவு...
பெரும்பாலான மாநில அரசுகள் தங்களின் ஏடிஎம் மையங்களில் 24 மணி நேர காவலாளிகளை அமர்த்துமாறு கேட்டுகொண்டுள்ளதாகவும் இது கடும் செலவுகளை ஏற்படுத்தும் என்றும் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு மையத்தை ஒரு மாதம் 24 மணி நேரமும் பாதுகாக்க ரூபாய் நாற்பதாயிரம் செலவாவதால் இதை ஈடு செய்யும் அளவிற்கு பரிவர்த்தனைகள் தேவைப்படும்.
ஏடிஎம் தேவை 4,00,000 ஆக உயர்வு!!
ஏடிஎம் தொழில் இந்தியாவில் ஒருகிணைந்த ஆண்டு வளர்ச்சியாக 26.8 சதவிகிதம் 2007-08 ஆண்டிலிருந்து 2012-13 வரை அடைந்துள்ளது. 2012-13 ஆண்டில் ஏடிஎம்-களின் எண்ணிக்கை 1,14,000ஆக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாத இறுதியில் நாட்டில் 1,37,000 ஆகவும் அதே சமயம் தேவை எண்ணிக்கை 4,00,000 ஆகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications