டெல்லி: சுகாதாரக் காப்பீட்டு துறை, அதிரிகரித்து வரும் சந்தை ஊடுருவல், திடமான வளர்ச்சியை சந்தையில் காட்டி வருகிறது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2012-13 நிதியாண்டில் மொத்த பிரீமியத் தொகையில் 17 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீடு அல்லாத காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் 2011-12 நிதியாண்டில் சேகரிக்கப்பட்ட மொத்த பிரீமியத்தொகை ரூ.13,469 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 2012-13 நிதியாண்டில் ரூ.15,701 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை, சுகாதாரக் காப்பீட்டு பிரீமியத் தொகை உயர் வளர்ச்சியானது, அதிகளவில் தேவை உந்துதலாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் காப்பீடு அல்லாத காப்பீட்டு நிறுவனங்களால் (முழுமையான சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்கள் நீங்கலாக) முந்தைய நிதியாண்டில் சேகரிக்கப்பட்ட பிரீமியத்தொகை ரூ.11,777 கோடியுடன் ஒப்பிடுகையில், 2012-13 நிதியாண்டில் இது ரூ.13,975 கோடியாக உயர்ந்துள்ளது.
"அதிவேகமாக வளர்ந்துவரும் துறைகளில் சுகாதாரக் காப்பீட்டுத் துறையும் ஒன்றாகும். இந்த சுகாதாரக் காப்பீட்டுத் துறை வணிகமானது கடந்த ஐந்து வருடங்களாக, தொடர்ச்சியான இரட்டை இலக்க எண்ணிக்கை விகிதத்தில் வளர்ச்சிக் கண்டு வருகிறது, இந்த வளர்ச்சி விகிதம், 2006-07 மற்றும் 2010-11 காலப்பகுதியில் இருந்த உயர்மட்ட நிலையில் இருந்து கணிசமாக குறைந்துள்ளது" என ஐஆர்டிஏ-யின் (காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) சமீபத்திய வருடாந்திர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியத் தொகையின் ஒருங்கிணைந்த பங்களிப்பு 61 சதவிகிதமாக இருப்பதால், இந்த பிரிவில் இந்நிறுவனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மொத்த பிரீமியத் தொகையில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு 28 சதவிகிதமாக கணக்கிடப்பட்டுள்ளது, அதேவேளை எஞ்சிய விகிதம், நான்கு முழுமையான சுகாதார தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகாலமாக, சுகாதார காப்பீட்டு பிரிவு, சிஏஜிஆர் (கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம்) விகிதத்தில் 30.05 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது, இது அதே காலப்பகுதியின், மொத்த உள்நாட்டு பிரீமிய வளர்ச்சியின் சிஏஜிஆர் (17.50 சதவிகிதம்) ஐ விட கணிசமான அளவு அதிகமாகும்.