மும்பை: "பேமென்ட்ஸ் வங்கி" என்ற விசேஷ வங்கிகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா திறக்க வேண்டும் என்று நிதி உட்படுத்தலுக்காக ஆர்.பி.ஐ. நியமித்த குழு பரிந்துரைத்துள்ளது. சிறு தொழில்கள் மற்றும் குறைந்த வருவாயை ஈட்டித் தரும் தொழில்களுக்கு, பணம் செலுத்தும் சேவைகள் மற்றும் வைப்புத்தொகை சேவைகளை அளித்திடவே இந்த பரிந்துரையை செய்துள்ளது அந்த குழு.
இந்த புதிய வங்கி ஏழை வாடிக்கையாளர்களை கையாளுவதால், அதிகபட்சமாக 50,000 ரூபாய்க்கு மேலான வைப்புத் தொகையை ஏற்றுக் கொள்ளாது என்று இக்குழுவின் தலைவர் நாஷிகெட் மோர் கூறியுள்ளார்.
பணம் மாற்றுதல் மற்றும் இணையதளம் மூலம் பணம் செலுத்துதல் போன்ற பணம் சேவைகளின் மூலம் இவ்வகை வங்கிகள் வருவாயை ஈட்டும். பாதுகாப்பான அரசாங்க பங்குகளில் (G-secs) முதலீடு செய்தும் வருவாயை ஈட்டும்.
இந்த வங்கியின் ஏழை வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க, பணத்தை வெளி சந்தைக்கு கடனளித்திட இவ்வகை வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட மாட்டாது. "எவ்வகையான கடன் இடர்பாடுகளையும் ஊகிக்க இந்த வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மற்ற வங்கிகளை போலவே, தனக்கு வரும் மொத்த வைப்புத் தொகையின் ஒரு பங்கை காப்பு ரொக்க விகிதத்தில் ஆர்.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், மீதி இருக்கும் வைப்புத் தொகையை இந்த வங்கி, G-secs யிடம் மூன்று மாத காலத்திற்குள் வைப்புத்தொகையாக கொடுத்திட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இவ்வகை வங்கிகள் திவாலாகும் என்ற இடர்பாடு இல்லை என்பதால், பொதுவாக 500 கோடி என்றிருக்கும் வங்கியின் குறைந்தபட்ச மூலதனம் 50 கோடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
ஏற்கனவே இருக்கும் வங்கிகள், இவ்வகையான பேமென்ட்ஸ் வங்கியை தன் துணை வங்கியாக திறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.