மும்பை: எல்ஐசி நிறுவனத்தின் கிளை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் நிறுவனம் வீட்டு அடமானக் கடன், கடன் சார்ந்த பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 2013-14 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. இந்நிறுவனத்தின் இலாபம் 38 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 326.59 கோடியை எட்டியதாக எல்ஐசி ஹவுசிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே வேளையில் ரூபாய் 236.25 கோடியாக மட்டுமே இருந்தது என் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் காலாண்டு வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூபாய் 1,935 கோடியிலிருந்து ரூ. 2,343 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவன புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் அதன் இலாபம் 34 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது. அது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூபாய் 707.06 கோடியிலிருந்து ரூ. 947.16 கோடியாக அதிகரித்திருந்தது. இந்த 9 மாத இடைப்பட்ட கால கட்டத்தில் அதன் மொத்த வருவாயானது கடந்த ஆண்டின் ரூபாய் 5,584 கோடியிலிருந்து நடப்பாண்டில் ரூ.6,857 கோடியாக உயர்ந்தது.