சென்னை: உலக அளவில் மிகப்பெரும் நிறுவனங்களின் மத்தியில் அவற்றுக்கு இணையாக பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஈட்டி இந்திய நிறுவனங்களும் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றன. இந்த நேரத்தில் உலகின் சிறந்த 500 நிறுவனங்களுக்கான பட்டியலில், 10 இந்திய இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. இப்பட்டியலில் நிறுவனங்களின் வருவாயைப் பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இன்றைக்கு ரிலையன்ஸ், டாடா, ஆதித்யா பிர்லா போன்ற நிறுவனங்களை பார்த்து வாயை பிளக்கும் பல முன்னணி நிறுவனங்கள் உண்டு.
இந்தியன் ஆயில் கார்பொரேஷன்
வருவாய்: 4,75,867.36 கோடி ரூபாய்
லாபம்: 4,449.01 கோடி ரூபாய்
சொத்து மதிப்பு : 1,65,843.56 கோடி ரூபாய்
1964 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் உலக சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 88ஆவது இடத்திலும் இந்தியவில் முதல் இடத்திலும் உள்ளது. டெல்லியை தலைமையகமாகக் கொண்ட இவ்வரசு நிறுவனம், நாட்டின் பெட்ரோலிய பொருட்கள் சந்தையில் 49 சதவிகிதத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. நாட்டில் மிக அதிகமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களைக் கொண்டதாகவும் ஐஒசி விளங்குகிறது.
ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
வருவாய்: ரூபாய் 4,09,883 கோடி
இலாபம் ரூபாய் 20,879 கோடி
சொத்து மதிப்பு ரூபாய் 2,90,755 கோடி
1966 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு எண்ணை கண்டுபிடிப்புகள், உற்பத்தி, சுத்திகரிப்பு, சந்தையிடுதல், பெட்ரோலிய வேதிப்பொருட்கள், சில்லரை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது இந்நிறுவனம். மும்பையை தலைமையகமாகக் கொண்ட இது இந்தியாவின் மிகப்பெரும் தனியார் நிறுவனமாக விளங்குவதோடு உலக மிகப்பெரும் நிறுவனங்கள் பட்டியலில் 103ஆவது இடத்தை 2013 ஆம் ஆண்டில் பிடித்துள்ளது.
பாரத் பெட்ரோலியம்
வருவாய்: ரூ2,44,822.55 கோடி
இலாபம்: ரூ1,880.83 கோடி
சொத்து மதிப்பு: ரூ51,696.02 கோடி
மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.எண்ணை வளக்கண்டுபிடிப்பு, சுத்திகரிப்பு மற்றும் சந்தையிடுதல் ஆகிவற்றை முக்கியமாக மேற்கொண்டுள்ள இந்நிறுவனம் இந்திய அரசின் "நவரத்தின" அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
வருவாய்: ரூ2,17,771.07 கோடி
இலாபம் : ரூ501.30 கோடி
சொத்து மதிப்பு: ரூ66,126.38 கோடி
1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் 500 உலகப் பெருநிருவனப் பட்டியலில் 260 வது இடத்தை அடைந்துள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அரசு நிறுவனம் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு சந்தையில் நாட்டில் 20 சதவிகித இடத்தைக்கொண்டுள்ளது
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ )
வருவாய் : ரூ2,00,559.84 கோடி
இலாபம் : ரூ17,916.23 கோடி
சொத்து மதிப்பு: ரூ19,60,412.69 கோடி
எஸ்பிஐ வங்கி, வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் மிகப்பெரும் சொத்துகளோடு முன்னோடியாகத் திகழ்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற இந்த பெயர் 1955 ஆம் ஆண்டு இவ்வங்கி அரசுடமை ஆக்கப்பட்டபின் உருவானது. வரலாற்றை சற்று புரட்டினால், இவ்வங்கி பேங்க் ஆப் மெட்ராஸ், பேங்க் ஆப் கல்கட்டா மற்றும் பேங்க் ஆப் பாம்பே ஆகியவற்றை ஒருங்கிணைத்து இம்பீரியல் வங்கியாகவும் பின்னர் அதுவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாகவும் மாறியது தெரிய வரும்.
டாடா மோட்டார்ஸ்
வருவாய் : ரூ1,92,660.59 கோடி
இலாபம் : ரூ9,892.61 கோடி
சொத்து மதிப்பு : ரூ1,03,202.37 கோடி
1945 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல் படும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஓர் மிகப்பெரும் பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும். கார், டிரக், பஸ்கள், சொகுசு வண்டிகள் மற்றும் வேன்கள் தயாரிக்கும் இவ்விந்திய நிறுவனம் டிரக்குகள் தயாரிப்பில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் (ஒஎன்ஜிசி)
வருவாய் : ரூ1,68,286.16 கோடி
இலாபம் : ரூ24,219.62 கோடி
சொத்து மதிப்பு :ரூ 2,02,131.23 கோடி
மத்திய எண்ணை மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனம், நாட்டின் மிகப்பெரும் எண்ணைவள கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். 1956 ஆம் ஆண்டு துவங்கி டெஹ்ராடூனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் ஒரு இந்திய அரசு நிறுவனமாகும்.
டாடா ஸ்டீல்
வருவாய் : ரூ1,34,737.80 கோடி
இலாபம் (நட்டம்): (-) ரூ7,057.62 கோடி
சொத்து மதிப்பு: ரூ1,10,689.09 கோடி
பல்வேறு உருக்கு உற்பத்திப் பொருட்களை தயாரிக்கும் டாட்டா ஸ்டீல் நிறுவனம் இத்துறை முன்னோடிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு நூற்றாண்டு நிறைவை கொண்டாடியது.
எஸ்ஸார் ஆயில்
வருவாய் : ரூ92,947.50 கோடி
இலாபம் (நட்டம்): (-) ரூ1180.44 கோடி
சொத்து மதிப்பு : ரூ29,409.95 கோடி
இந்நிறுவனம் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு தேடல், உற்பத்தி, சுத்திகரிப்பு, சந்தையிடுதல் ஆகிய துறைகளில் செயலாற்றுகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இது குஜராத் மாநிலத்தில் வாதினார் என்ற இடத்தில் சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ளது.
கோல் இந்தியா லிமிடெட்
வருவாய் : ரூ92,518.26 கோடி
இலாபம்: ரூ17,356.36 கோடி
சொத்து மதிப்பு : ரூ84,122.45 கோடி
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் உலகின் முதல் தனிப்பெரும் நிலக்கரி உற்பத்தி நிறுவனமாகும். இது இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் 81 சதவிகிதத்தை கொண்டுள்ளது. 1975 ஆம் ஆண்டு 79 மில்லியன் டன்களோடு உறபத்தியை துவங்கிய இந்நிறுவனம் 2012-13 ஆம் ஆண்டில் பிரமிக்கத்தக்க 452 மில்லியன் டன்களை எட்டியுள்ளது.