மும்பை: குறைந்த-விலை விமான சேவையை வழங்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கனேஸ்வரன் அவிலி அவர்களை தனது நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியாக (சிசிஓ) நியமித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
ஏவியேஷன் துறையில் பல வருடங்கள் அனுபவம் உடைய அவிலி, 2001 ஆம் ஆண்டு ஏர் ஏசியாவை தொடங்கிய குழுவில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் ஏசியாவில் பணியாற்றிய போது, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் வரை மேற்கொள்ளப்பட்ட அதன் எல்லை கடந்த விரிவாக்கத்தில் அவிலி அவர்கள் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார். மேலும், ஏர்ஏஷியா நிறுவனர்களுடன் இணைந்து ஆரவாரமற்ற தொடர் ஹோட்டலான ட்யூன் ஹோட்டல்ஸ் மற்றும் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் வர்த்தகமான ட்யூன்மணி ஆகியவற்றின் தொடக்கத்திலும் அவர் செயலாற்றியுள்ளார் என்று ஸ்பைஸ்ஜெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ட்யூன்ஹோட்டல்ஸ் மற்றும் ட்யூன்மணி ஆகியவற்றின் வெற்றிகரமான தொடக்கத்திற்குப் பின், அவிலி அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி, தனிப்பட்ட ஏவியேஷன் ஆலோசகராக உருவெடுத்துள்ளார். அப்போது மக்காவ், தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு கன்சல்டன்ஸி அஸைன்மென்டுகளையும் எடுத்துக் கொண்டு முடித்துள்ளார். அதன் பின் 2012ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் டைகர் ஏர் நிறுவனத்தின் வர்த்தக இயக்குனராக பொறுப்பேற்றிருக்கிறார்.
மீடியா ஜாம்பவானாகிய கலாநிதி மாறனுக்குச் சொந்தமான இத்தனியார் விமான நிறுவனத்தின் இப்பதவிக்கான அவிலி அவர்களின் நியமனம், அதன் முன்னாள் சிசிஓவாகிய ராய்ஷ் மொய்தீன் குட்டி அவர்கள் பதவி விலகி எட்டு மாதங்களுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.
"ஏர்லைன் வர்த்தகம் சார்ந்த விற்பனை மற்றும் விநியோகம், வருவாய் நிர்வாகம், மார்க்கெட்டிங், நெட்வொர்க் திட்டமிடல், ஏர்லைன் சிஸ்டம் மற்றும் சந்தை ஊடுருவல் சூட்சுமம் ஆகியவற்றில் அவரின் (அவிலியின்) ஆழமான துறை சார்ந்த அறிவு ஸ்பைஸ்ஜெட்டின் வர்த்தக திறமையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த வழித்தடம் மற்றும் ஏர்லைனின் லாபத்தை மேம்படுத்துவதில் முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை," என்று ஸ்பைஸ்ஜெட்டின் தலைமை செயலாக்க அதிகாரியான சஞ்சீவ் கபூர் கூறியுள்ளார்.
"கனேஷ் அவர்களின் நியமனம் ஸ்பைஸ்ஜெட்டின் நிர்வாக குழுவில் தற்போது நிகழ்ந்து வரும் புதிய மாற்றங்களின் ஒரு பகுதியாகும். வரும் வாரங்களில் மேலும் பல அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன," என்றும் அவர் கூறியுள்ளார்.
"இந்நிறுவனத்தின் நீண்ட கால எதிர்காலம் மற்றும் வளர்ச்சியின் மீது இக்குழுமம் மற்றும் அதன் பங்குதாரர்கள் காட்டி வரும் பொறுப்புணர்ச்சி தான், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து அதனை மேலும் பொலிவுறச் செய்யும் சவாலை ஏற்றுக்கொள்ளும்படி என்னை தூண்டியது," என்று அவிலி கூறியுள்ளார்.
இந்திய உள்ளூர் சந்தையில் சுமார் 19 சதவீதத்துக்கும் அதிகமான சந்தைப் பங்குடன் இருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், இந்தியாவின் இரண்டாவது பெரிய, குறைவு-விலை ஏர்லைனாகத் திகழ்கிறது.
தற்போது இந்த ஏர்லைன் நிறுவனம், 46 இந்திய நகரங்கள் மற்றும் 10 சர்வதேச நகரங்கள் உள்ளிட்ட 56 விமான நிலையங்களிலிருந்து சுமார் 360-க்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை இயக்கி வருகிறது.