மும்பை: நிறுவனத்திலும், நிர்வாகத்திலும் சிக்கல், குழப்பங்கள் இருப்பது இயல்புதான். ஆனால் சிக்கல், குழப்பமே நிறுவனமாக இருந்தால் என்ன செய்வது. அப்படி பட்ட நிறுவனம் தான் கிங்பிஷர் ஏர்லைன்ஸ். துவக்கத்தில் இந்நிறுவனம் கொடி கட்டி பறந்தது உண்மை தான், ஆனால் இப்போது இந்நிறுவனத்தின் நிலை படு மோசமாக உள்ளது. இந்நிலையில் இந்நிறுவத்தின் டிசம்பர் 31, 2013 உடன் முடிவடைந்த மூன்றாவது காலண்டு முடிவுகளை வெளியிட்டது.
3ஆம் காலாண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் லாபம் இல்லை, ஆனால் நிகர நஷ்டம் ரூ.822.42 கோடி என வியாழக்கிழமையன்று கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஒரு ஆண்டுக்கும் மேலாக விமான சேவைகள் எதுவும் செய்யாமல் இருக்கும் இந்நிறுவனம், ஒரு ஆண்டுக்கு முன்னர் ரூ.755.17 கோடிகள் நஷ்டமடைந்ததாக மும்பை பங்குச் சந்தையில் பதிவு செய்யத அறிக்கையில் தெரிவித்தது.மேலும் இந்த காலாண்டில் எந்த வியாபாரமும் இல்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
நிதி செலவினங்கள்
நடப்பு நிதியாண்டின் 3ஆம் காலாண்டிற்கான நிதி செலவினங்கள் ரூ.350.99 கோடியாக இருந்தது, இதே கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.401.26 கோடியாக இருந்தது என குறிப்பிட்டது.
மறுவிநியோக செலவு
முந்தைய காலாண்டில் ரூ.274.80 கோடிகளாக இருந்த மறுவிநியோக செலவு, இந்த ஆண்டு 45.83 சதவிகிதம் உயர்ந்து ரூ.400.73 கோடியாக உயர்ந்துள்ளது. 2005-ம் ஆண்டிலிருந்தே கிங்பிஷர் நிறுவனம் இலாபம் அடையவில்லை.
7,200 கோடி கடன்
இந்த தனியார் நிறுவனம் ஊதியம் வழங்காதது மட்டுமல்லாமல், மிகப்பெரிய அளவு கடன் சுமை மற்றும் நஷ்டத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்திற்கு கடன் அளித்துள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு, சுமார் ரூ.7,200 கோடிகளை கடனாக திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.
பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 0.34 சதவிகிதம் சரிந்து 2.97 ரூபாயிக்கு விற்பனையாகிக் வருகிறது.