டெல்லி: அமெரிக்க கருவூலத்தின் கடன்பத்திர கொள்முதல் நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக கடந்த இரண்டு வாரங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர்.
எனவே இதன் மூலம் அன்னிய அமைப்புசார் முதலீட்டாளர்கள் (FII) இந்த ஆண்டில் நிகர விற்பனையாளர்களாகவும் மாறியுள்ளனர். சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 1.23 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை 2013ஆம் ஆண்டு வாங்கிய பின்னர், சுமார் ரூ.1,298 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை ஜனவரி மாதம் விற்று உள்ளனர்.
ரூ.2,012 கோடி வெளியேற்றம்
அன்னிய அமைப்புசார் முதலீட்டாளர்கள் மொத்தமாக 25,573 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடு செய்ததோடு 27,586 கோடி ரூபாய் முதலீடுகளை திரும்பவும் பெற்றுள்ளனர். இதனால் 2,012 கோடி ரூபாய் (322 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவிற்கு வெளியேற்றம் நடந்துள்ளதாக பங்குச்சந்தை நிர்வாக அமைப்பான செபி தெரிவித்துள்ளது.
உலக வர்த்தக நிகழ்வு
இந்த விற்பனை அமெரிக்க நிதிச்சீரமைப்பு ஆகிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய உலக வர்த்தகநிகழ்வுகளின் விளைவு என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடன் பத்திரக் கொள்முதல்
கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்க அரசு கடன் பத்திரக் கொள்முதலை 85 பில்லியன் டாலர்களிலிருந்து 75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைத்தது. இந்த மாதம் மேலும் 10 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கொள்முதலைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
காத்திருப்பு மிகவும் அவசியம்..
மே மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் புதிய அரசு பதவியேற்ற பிறகு முதலீடுகள் வரும் வரை அன்னிய முதலீட்டுச் சந்தையானது வலுவான முதலீடுகளைக் காண்பது அரிது என வல்லுநர்கள் மேலும் தெரிவித்தனர்.
கடன் சந்தை
இந்நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை சுமார் 7,372 கோடி ரூபாய் கடன் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். சமீபத்திய முதலீட்டுத் திருப்ப நடவடிக்கைகளுக்குப் பிறகு, கடன் பத்திரங்களில் அன்னிய அமைப்புசார் முதலீடு 2014ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 801 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.
ஃபிப்ரவரி 14-ஆம் தேதி
ஃபிப்ரவரி 14-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட அன்னிய முதலீட்டு அமைப்புகள் எண்ணிக்கை 1,727 ஆகவும் அதனுள் அடங்கிய மொத்த கணக்குப் பிரிவுகளின் எண்ணிக்கை 6,380 ஆகவும் இருந்தது.