டெல்லி: இந்திய தபால் துறை கடந்த வாரம் அனைவரும் விரும்பும் வகையில் மின்னணு போஸ்டல் ஆர்டர் சேவையை (e-IPO) துவங்கியது. இச்சேவை இந்திய மக்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது. இது தகவல் அறியும் உரிமை செயல் முறையை மேலும் வலுவாக்கும் எனக் கருதப்படுகிறது.
இதற்கு முன் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தியது அதன் மூலம் அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தினைப் பயன்படுத்தத் தேவையான கட்டணத்தை செலுத்த வழி செய்தது.
இ- ஐபிஒ
மின்னணு போஸ்டல் ஆர்டர் சேவை, தகவல் அறியும் உரிமை சட்டதினைப் பயன்படுத்தத் தேவையான கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்த உதவும் ஒரு சேவையாகும்.
கூட்டு முயற்சி
இந்தச் சேவையைத் துவங்கிவைத்துப் பேசிய தபால் துறைச் செயலர் பி கோபிநாத், இச்சேவை தபால் துறை, தேசிய தகவல் மையம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால் உருவானதாகத் தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
"இந்த மின்னணு இந்திய போஸ்டல் ஆர்டரை தபால் துறை அறிமுகம் செய்ததன் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மேலும் வலுப்பெறும்" எனவும் அவர் தெரிவித்தார்.
தபால் துறையின் இதர சேவைகள்
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பின் கோடு வாயிலாக இந்திய கிராமம் முதல் பெருநகரங்கள் தேடும் திட்டம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட மின்னணு தபால் சேவை ஆகிய மேலும் இரண்டு சேவைகளையும் கோபிநாத் துவக்கி வைத்தார்.