டெல்லி: கருப்பு பணம் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கருப்பு பணத்தை களைய பல நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும் இத்தடைகளையும் மீறி இந்தியர்கள் தங்களின் கருப்பு பணத்தை வெளிநாட்டுகளில் உள்ள நிறுவனத்தின் மூலம் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்வதாக வருமான வரி துறையினருக்கு தகவல் வந்தது. இதனை தடுக்கும் வகையில் வருமானவரி துறையினர் முக்கியமான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய பல வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குசந்தை வாரியத்தில் பதிவு செய்யதுள்ளனர். இந்த ஆர்வத்திற்கு இந்தியாவின் பல்வேறு துறைகளில் மத்திய அரசு அன்னிய முதலீட்டுக்கான அளவீட்டை தளர்த்தியது ஒரு காரணம் என்றாலும். இத்தகைய பங்கு சந்தை முதலீட்டின் மூலம் இந்தியர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக மற்ற முயல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் அளவிற்கு அதிகமான நிறுவனங்கள் பங்கு சந்தை வாரியத்தில் பதிவு செய்துள்ளதால் வருமான வரி துறையினருக்கு இத்தகைய சந்தேகம் ஏழுந்துள்ளது. இத்தகைய தவறான முதலீட்டை கண்காணிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய வருமானவரி துறை பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து, சவுதி அரேபியா, லண்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வருமான வரித்துறை வெளிநாட்டு பிரிவுகளை அமைத்து இந்தியா மீதான முதலீட்டை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கருப்பு பணம் முதலீடு செய்வதை கண்காணிக்க மேற்கண்ட 7 நாடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த அதிகாரிகள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முதன்மை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.