டெல்லி: இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது. மேலும் இத்துறையில் போட்டிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதிய நிலவரத்தின் படி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதிகவாடிக்கையாளர்களை கொண்டும், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.
கடந்த வாரம் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஒரு முக்கிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதில் 2014ஆம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் தொலாதொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10.46 சதவீதம் வளர்ச்சியடைந்து 58,385 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக டிராய் தெரிவித்தது.
டெலிகாம் நிறுவனங்களுக்கு தனது வாடிக்கையாளர் முலம் கிடைக்கும் சராசரி வருவாய் இந்த வருடம் 16.87 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் 99 ரூபாயாக இருந்த வருவாய் 115.70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் இந்தியாவில் தொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 91.50 கோடியாக உயர்ந்துள்ளதாக டிராயின் அறிக்கையில் தெரிவிக்கிறது. இதில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 88.63 கோடியாகும்.