சென்னை: ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனம் இன்று தன்னுடைய முதல் பயணத்தை துவங்குகிறது. இந்நிறுவனம் இன்று மாலை 3.10 மணியளவில் பெங்களூருவிலிருந்து புறப்பட்டு கோவா செல்கிறது.
மலேசியாவின் ஏர்ஏசியா, டாடா சன்ஸ் குழுமம் மற்றும் அருண் பாட்டியாவின் டெலிஸ்ட்ரா ட்ரேட்ப்லேஸ் (49:30:21) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது ஏர்ஏசியா இந்தியா நிறுவனம்.
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் இதற்கான அனுமதியை சமீபத்தில் வழங்கியது.
கடும் போட்டி
இந்தியாவில் ஏற்கனவே பறந்து கொண்டிருக்கும் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் ஜெட் ஏர்வேஸின் ஜெட்லைட் ஆகிய விமான நிறுவனங்களுக்குக் கடும் போட்டியாக ஏர்ஏசியா தன் கால்களை இந்தியாவில் பதித்துள்ளது.
மலிவு விலை சேவை
விமான போக்குவரத்து துறையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக இந்த 4 விமான நிறுவனங்களும் ஏற்கனவே மிகவும் மலிவான விலையில் இந்தியாவில் தங்களுடைய விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது.
ஏர் ஏசியா சலுகை
இத்தகைய நிலையில் அனைத்து நிறுவனங்களை விட சுமார் 35 சதவீதம் வரை குறைவாகக் கட்டணம் வசூலிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு ஏர்ஏசியா களத்தில் குதித்துள்ளது. டயர்-2 எனப்படும் முக்கிய நகரங்களை இணைக்கப் போவதாகவும் இந்த நிறுவனத்தின் மித்தூன் சாண்டில்யா கூறியுள்ளார்.
போட்டி சலுகைகள்
இதையடுத்து, இண்டிகோ நிறுவனம் நிறைய சலுகைகளைத் தன் வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் கடந்த ஜனவரி முதல் 13 விதமான சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்திய வானில்...
உள்ளூர் விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் இண்டிகோ 31.6 சதவீதமும், ஜெட் ஏர்வேஸ் - ஜெட்லைட் கூட்டாக 21.8 சதவீதமும், ஏர் இந்தியா 18.3 சதவீதமும், ஸ்பைஸ்ஜெட் 17.9 சதவீதமும், கோஏர் 9.5 சதவீதமும் இந்திய வான் எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.