டெல்லி: இந்திய வங்கி அமைப்புகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார். இதில் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வங்கியாளர்கள் நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் வங்கிகளுக்கு இப்போது பெரிய தலைவழியாக இருக்கும் வாராக் கடனை, வசூலிக்க தனியாக நிறுவனத்தை (ஏ.ஆர்.சி) அமைப்பது, எல்.ஐ.சி நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். வங்கிகள் வாராக் கடனுக்காக ஒதுக்கும் தொகையில் 100 சதவீத வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வங்கியாளர்கள் இந்த கூட்டத்தில் முன்வைத்தனர்.
வைப்பு நிதி
வங்கி மற்றும் வங்கி சார்ந்த நிறுவனங்களில் நிரந்தர வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு, வரி பிடித்தம் செய்யும் அளவு ரூ.10,000 இருந்த ரூ.20,000 ஆக உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
எல்.ஐ.சி
இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தை பங்குச் சந்தையில் சேர்ப்பதால் நிதித்துறையில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கோடக் மஹிந்திரா வங்கியின் செயல் துணைத் தலைவர் உதய் கோடக் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
வருமான வரி விலக்கு
மேலும் வருமான வரி விலக்கு வரம்புக்கான 80சி பிரிவில் இரண்டு பிரிவு உருவாக்கப்பட வேண்டும். வரி வரம்பு அளவு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடன் பத்திரங்கள்
80 சிசிஎப் என்ற பிரிவை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் அடிப்படைக் கட்டமைப்புக்கான கடன் பத்திரங்களில் முதலீடு பெருகும் என்று வங்கியாளர்கள் ஆலோசனை கூறினர்.