டெல்லி: ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனம் தன்னுடைய 3ஜி சேவைகளை மேலும் 5 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே 13 வட்டங்களில் தன்னுடைய 3ஜி சேவைகளைக் கொடுத்து வரும் ரிலையன்ஸ், வரும் ஜூன் 20 முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) ஆகிய தொலைத்தொடர்பு வட்டங்களிலும் அளிக்கவுள்ளது.
இத்துடன் அந்த நிறுவனத்தின் அதிவேக 3ஜி சேவை அனைத்து தென் மாநிலங்களையும் சென்றடைகிறது. குறிப்பாக, அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்தச் சேவை கிடைத்துள்ளது.
இதன்மூலம் இந்த தொலைத்தொடர்பு வட்டங்களில் வேகமாக வளர்ந்து வரும் டேட்டா மார்க்கெட்டை அணுக முடியும் என்றும், ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் 80 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வரிவாக்கம் லாபகரமாக அமையும் என்றும் ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் வர்த்தகத் தலைமை அதிகாரி குர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
"எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து தரமான சேவைகளைத் தருவதே எங்கள் கடமை. இந்த அதிவேக 3ஜி சேவை அவர்களுக்கு எங்கள் மீது மேலும் நம்பிக்கையையும் மதிப்பையும் அதிகரிக்கும். இதனால் தரமான சேவைகளை அளிப்பதில் ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனம் முன்னணியில் இருக்கும்" என்றும் குர்தீப் கூறினார்.