பெங்களுரூ: இந்தியாவின் புதிய மலிவு விலை விமான நிறுவனமான ஏர்ஏசியா நிறுவனம் பெங்களுரூ-கொச்சி வழித்தடத்தில் தனது சேவையை துவங்க உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பெங்களுரூ-சென்னை, பெங்களுரூ-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ள நிலையில் பெங்களுரூ-கொச்சி இடையே அளிக்கப்படும் சேவையை வெறும் 500 ரூபாய்க்கு அளிக்க உள்ளதாக ஏர்ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய குறைந்த விலை விமான சேவையை ஏர்ஏசியா நிறுவனம் வருகின்ற ஜூலை 20ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக திங்கட் கிழமை அறிவித்தது.
35% குறைவான கட்டணம்
இந்தியாவில் விமான சேவை அளிக்கும் அனைத்து நிறுவனங்களில் ஒப்பிடுகையில் ஏர்ஏசியா நிறுவனத்தின் விமான கட்டணங்கள் அனைத்தும் 30 முதல் 35 சதவீதம் குறைவாகவே உள்ளது. மேலும் இந்நிறுவனம் விமான சேவைக்கான ஒப்புதலை பெரும்போது ஏர்ஏசியாவின் விமான கட்டணங்கள் 35% குறைவாக இருக்கும் என வாக்கு உறுதியை அளித்ததை இந்நிறுவனம் காப்பாற்றி வருகிறது.
முதல் பயனம்
இந்நிறுவனம் தனது முதல் பயனத்தை கடந்த 12ஆம் தேதி பெங்களுரூ-கோவா நகரங்களுக்கிடையே தினசரி வழித்தடத்தில் சேவையை துவங்கியது. இதற்கான கட்டணம் 1999 ரூபாய் எனவும் அறிவித்தது.
சென்னை- பெங்களுரூ
இந்நிலையில் இரண்டாவது வழித்தடமான சென்னை- பெங்ளுரூ இடையே ஏர்ஏசியா நிறுவனம் வருகிற 19ஆம் தேதி தனது சேவையை துவங்குகிறது. மேலும் இவ்வழிதடத்தில் தினசரி இருமுறை என இருவழிப் பாதை வழித்தட சேவையை துவங்கவுள்ளது.
ஜூலை 20
பெங்களுரூ-கொச்சி இடையே தினசரி இருவழி வழித்தட சேவையை வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அளவிட்ட சலுகையாக இதற்கான கட்டணம் ரூ.500 எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
போட்டி மேலும் சூடு பிடித்தது
இந்நிலையில் இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி துவங்கி உள்ளது. ஏற்கனவே கிங்பிஷர் நிறுவனத்தின் கப்பல் கவிழ்ந்துள்ளது, ஏர்ஏசியா நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்பைஸ்ஜெட் தொடர்ந்து மலிவு விலை விமான சேவையை அளித்து வருகிறது.
ஸ்பைஸ்ஜெட்
அதிகப்படியான மலிவு விலை விமான சேவையை வழங்குவதினால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தில் திளைக்கிறது.