டெல்லி: இந்தியாவில் மொபைல் இண்டர்நெடின் பயன்பாடு அதிகரித்த நிலையில வோடாபோன் நிறுவனம் தனது 2ஜி மற்றும் 3ஜி சேவைக்கான கட்டணத்தை நாடு முழுவதும் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த புதிய விலை பட்டியலின் படி வோடாபோன் நிறுவனத்தின் ப்ரீபேய்டு மற்றும் போஸ்டுபேய்டு வாடிக்கையாளர்களுக்கு pay-as-you-go (PAYG) திட்டத்தில் 10கேபி தகவலுக்கும் 2 பைசாவாக இருந்த கட்டணம் தற்போது 4 பைசாவாக உயர்ந்துள்ளது.
அதிரடி விலை சலுகை
மேலும் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர கடந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் இண்டர்நெட் சேவைக்கான கட்டணத்தை 80 சதவீதம் குறைத்தது. இதனால் 10கேபி டேட்டாவிற்கு 10 பைசாவாக இருந்த கட்டணம் 2 பைசாவாக குறைந்தது. இதனால் வாடிக்கையாளர்களின் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்தது.
வோடாபோன்
இதுகுறித்து வோடாபோன் செய்திதொடர்பாளரிடம் பேசியபோது "கடந்த நவம்பர் மாதம் குறைத்த கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளோம், இந்நிலையிலும் வோடாபோன் நிறுவனத்தை விட சந்தையில் யாரும் குறைவாக அளிக்கவில்லை. மேலும் இந்த விலை மாற்றம் 2ஜி மற்றும் 3ஜி ஆகிய இரண்டு சேவைகளுக்கும் பொறுந்தும்" என அவர் தெரிவித்தார்.
தொகுதி வாரியாக அமல்படுத்தப்படும்
மேலும் இக்கட்டணத்தை தொகுதி வாரியாக அமல்படுத்தப்படும் எனவும் வோடாபோன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
வளர்ச்சி
2014ஆம் வருடத்தின் வோடாபோன் தகவல் அறிக்கையின் படி, இந்நிறுவனத்தின் டேட்டா டிராப்பிக் கடந்த வருடத்தை விட 125 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தில் 52 மில்லியன் இண்டர்நெட் பயனாளிகள் உள்ளனர். அதில் 7 மல்லியன் வாடிக்கையாளர் 3ஜி சேவையை பயன்படுத்துபவர் ஆவார்.