பெங்களுரூ: இந்தியாவில் மலிவு விலை விமான நிறுவனங்கள் பல உள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனங்கள் புதிய புதிய திட்டங்களை தீட்டுகின்றன, இதில் புதிதாக வந்த ஏர்ஏசியா நிறுவனமும் ஒன்று. சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள வடகிழக்கு இந்தியாவில் நிறைய விமானங்களைப் பறக்கவிடப் போவதாக ஏர்ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மலேசியாவின் ஏர்ஏசியா, டாடா சன்ஸ் குழுமம் மற்றும் அருண் பாட்டியாவின் டெலிஸ்ட்ரா ட்ரேட்ப்லேஸ் (49:30:21) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள ஏர்ஏசியா இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் 12ம் தேதி தன்னுடைய சேவையைத் தொடங்கியது.
கடும் போட்டி
இந்தியாவில் ஏற்கனவே பறந்து கொண்டிருக்கும் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் ஜெட் ஏர்வேஸின் ஜெட்லைட் ஆகிய விமான நிறுவனங்களுக்குக் கடும் போட்டியாக ஏர்ஏசியா தன் கால்களை இந்தியாவில் பதித்துள்ளது.
சலுகைகள்
போட்டி காரணமாக இந்த 4 விமான நிறுவனங்களும் ஏற்கனவே மிகவும் சீப்பான விலையில் இந்தியாவில் தங்களுடைய விமானச் சேவைகளை அளித்து வருகிறது.
ஏர் ஏசியா சலுகை
இந்த நிலையில் அவற்றைவிட சுமார் 35 சதவீதம் வரை குறைவாகக் கட்டணம் வசூலிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு ஏர்ஏசியா இந்திய விமானக் களத்தில் குதித்துள்ளது.
போகாத இடத்திற்கு...
இந்த நிலையில்தான் வடகிழக்கு இந்தியாவில் நிறைய விமானங்களைப் பறக்கவிடப் போவதாக ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. "யாருமே போகாத இடங்களுக்கும் கூட நாங்கள் போவோம்" என்று ஏர்ஏசியா குழுமத்தின் சிஇஓ டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தலங்கள்
வடகிழக்கு இந்தியாவில் சுற்றுலா தலங்கள் மிகவும் அதிகம். இங்கு எங்கள் விமானங்களைப் பறக்க விடுவது சுவாரஸ்யமாகவும், லாபகரமாகவும் இருக்கும் என்றும் டோனி கூறியுள்ளார்.
எப்படி இவ்ளோ சீப்பா?
எங்கள் நோக்கமே இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சாதாரண மனிதனையும் பறக்க வைப்பதுதான். அதனால், சேவைக் கட்டணத்தை அவர்கள் தலையில் கட்ட விரும்பவில்லை. இதுதான் எங்கள் சலுகைகளுக்கான முக்கிய காரணம். இதுகுறித்து எங்கள் போட்டியாளர்கள் புகார் செய்யாமல் இருந்தால் சரி என்றும் டோனி கூறினார்.
ரத்தன் டாடா
டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா ஏர்ஏசியாவின் செயல்பாடுகள், புதிய சேவைகள், மற்றும் சலுகைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.