டெல்லி: விமான பயண வாடிக்கையாளர்களை கவரவும், சந்தையில் தங்கள் வர்த்தகத்தை நிலைநாட்டவும் செவ்வாய்கிழமை உள்நாட்டு விமான நிறுவனங்கள் 1,999 ரூபாய் என்ற சலுகை விலையில் டிக்கெட்டுகளை விற்று வருகிறது.
இந்தியாவில் மலிவு விலை விமான நிறுவனங்களான ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோஏர் ஆகிய நிறுவனங்கள் முன்று நாள் சிறப்பு விற்பனையாக 1,999 ரூபாய் என்ற சலுகை விலையில் விமான சேவை அளித்து வருகிறது.
நீண்ட விடுமுறை
வருகிற ஆகஸ்ட் 15 - 18 மற்றும் அக்டோபர் 2- 5 ஆகிய இவ்விரு கால கட்டங்களில் நீண்ட விடுமுறை கிடைக்கிறது இதனை பயன்படுத்த உள்நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதனால் தான் விமான போக்குவரத்து மிகவும் குறைவாக இருக்கும் இக்காலத்தில் மலிவு விலை விமான நிறுவனங்கள் அதிகப்படியான சலுகைகளை அளிக்கிறது என யாத்ரா.காம் நிறுவனத்தின் தலைவர் சரத் தால் தெரிவித்துள்ளார்.
ஸ்பைஸ் ஜெட்
இந்த சலுகை கட்டணத்தை முதலில் துவங்கியது ஸ்பைஸ் ஜெட் (வழக்கம் போல) நிறுவனம் தான். இந்நிறுவத்தை தொடர்ந்து இந்தியாவின் மற்ற நிறுவனங்களும் இத்தகைய சலுகை கட்டணத்தை அளிக்க துவங்கியுள்ளது.
சூப்பரான சான்ஸ்
இந்தியாவில் பருவ மழை துவங்கிய இந்நிலையில் தற்போது சுற்றுலா மேற்கொள்வது மிகவும் சிறப்பான தருணம். இதை மேலும் சுவாரஸ்யம்படுத்தும் வகையில் விமான கட்டணங்களும் குறைந்துள்ளது. இதை பயன்படுத்தி மக்கள் தங்கள் விடுமுறையை சிறப்பாக கழிக்கலாம்.
மான்சூன் சேல் ஆஃபர்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இந்த 1,999 ரூபாய் சலுகை கட்டணங்களை மான்சூன் சேல் ஆஃபர் என்று அழைக்கிறது. இதற்கான முன்பதிவு ஜூலை 15-17 வரை நடைபெறுகிறது.