டெல்லி: 2014-15 நிதியாண்டில் 100 ஸ்மார்ட் நகரங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் ரூ.7,060 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாட்டில் தற்போதுள்ள ஐ.டி. நகரங்களை விட இந்த 100 நகரங்களும் ஸ்மார்ட்டாக இருக்கும்.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வாரம் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
ஸ்மார்ட் நகரங்கள்
நாடு முழுவதிலுமிருந்து 100 நகரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே உள்ள நகரங்கள்
100 ஸ்மார்ட் நகரங்களைப் புதிதாக உருவாக்க வேண்டுமென்றால் 20 முதல் 30 ஆண்டுகள் பிடிக்கும். எனவே அது சாத்தியமில்லை. அதனால், ஏற்கனவே உள்ள பல நகரங்களுடன் சில புதிய நகரங்களையும் சேர்த்து ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.
நவீனம்
ஏற்கனவே உள்ள பெரிய நகரங்களை சாட்டிலைட் நகரங்களாக மாற்றுவதன் மூலமும், சிறிய நகரங்களை நவீனப்படுத்துவதன் மூலமும் இந்த ஸ்மார்ட் நகரங்கள் உருவாக உள்ளன.
அனைத்து சேவைகளும்
இந்த ஸ்மார்ட் நகரங்களில் ஐ.டி. உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளும் தங்கு தடையின்றி உடனடியாகக் கிடைக்கும். ஊரக போக்குவரத்து, குடிநீர் வினியோகம், வடிகால் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
ஐ.டி. நகரங்களைவிட ரிச்
இந்த ஸ்மார்ட் நகரங்கள் நாட்டில் தற்போதுள்ள ஐ.டி. நகரங்களைவிட பிரம்மாண்டமாக இருக்கும். இதனால் இந்த நகரங்களில் கிடைக்காத வசதிகளே இல்லை என்ற நிலை ஏற்படும்.