சென்னை: மத்திய அரசு நடப்பு பட்ஜெட்டில் சில வருடங்களுக்கு முன் பணப் பரிமாற்ற முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு நிறுத்தி வைத்திருந்த கிசான் விகாஸ் பத்திரங்களை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இதன் பலன்கள் முன்பிருந்ததைப் போலவே இருக்குமானால் இதனால் பெரும் பயன் எதுவும் இருக்காது. அதற்கான நான்கு காரணங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
வரிச் சலுகைகள் இல்லை
அஞ்சலக தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் வைப்பு நிதி ஆகியவை வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகைகளை அளிக்கின்றன. கிசான் விகாஸ் பத்திரங்கள் நிறுத்தப்பட்டபோது அதில் எந்த வரிச்சலுகைகளும் இருந்ததில்லை. மேலும் அரசு தற்போது மறு அறிமுகம் செய்துள்ள இவற்றில் வரிச்சலுகைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பொது வைப்பு நிதியுடன் ஒப்பிட முடியாது.
வட்டி வருவாயில் வரிச்சலுகையுள்ள பொது வைப்பு நிதிகளைப் போலல்லாமல் கிசான் விகாஸ் பத்திர வட்டி வரிவிதிப்பிற்குட்பட்டது. இதனால் இது ஒரு சிறந்த முதலீட்டு வழிமுறையாக இருக்க முடியாது.
வட்டி விகிதம் வங்கிகளை விடக் குறைவு
வரிச்சலுகைகளற்ற மற்றும் வங்கிகளை விடக் குறைவான வட்டி தரும் கிசான் விகாஸ் பத்திரம் இதில் முதலீடு செய்ய குறைந்த ஆர்வத்தையே அளிக்கிறது. உண்மையில், அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள் அனைத்துமே குறைந்த வட்டியையே அளிக்கின்றன.
வங்கி வைப்புகள் பிரச்சனைகள் இல்லாதவை
வங்கி வைப்புகள் முதிர்வுத்தொகையை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள வசதி செய்து தருகின்றன. ஆனால் கிசான் விகாஸ் பத்திரங்களை ஒப்படைத்துப் பணம் பெறவும் வட்டியைப் பெறவும் ஒருவர் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டும்.
ம்ம்...பாவம் போஸ்ட் ஆபீசுங்க....