டெல்லி: ரூ50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுதீர் குமார் ஜெயினை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.
சில நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சுதீர்குமார் ஜெயின் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூர், போபால், மும்பை, டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் சுமார் 20 இடங்களில் சிபிஐ சோதனையிட்டது.
இந்த சோதனையின் போது லஞ்சப் பணம் ரூ50 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் பல சொத்து பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த புகாரின் அடிப்படையில் மேலும் 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிண்டிகேட் வங்கியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சுதீர்குமார் ஜெயின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.