டெல்லி: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை அளித்துவரும் இந்தியாவின் மிகப்பெரும் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா குழுமத்திற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் டாடா நிறுவனம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதேபோல அமெரிக்காவில் அந்நாட்டு பிரஜைகளுக்கும் டாடா நிறுவனம் வேலை கொடுத்து வருகிறது.
இந்திய கம்பெனிகள்
அமெரிக்காவில் தொழில் தொடங்கி நடத்தி வரும் பல்வேறு இந்திய நிறுவனங்களில் இதுவரை அங்குள்ள 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
டாடா சாதனை
இவர்களில் சுமார் 24,000 பேருக்கு டாடா குழுமத்தின் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 12 டாடா நிறுவனங்கள்
இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான டாடா குழுமம் அமெரிக்காவில் 12 நிறுவனங்களை நடத்தி வருகிறது. வ்யோமிங் நகரில் சோடா ஆஷ் மைன்ஸ், மேரிலாண்டில் காஃபி தயாரிப்பு நிறுவனம், ஓஹையோ மற்றும் பென்சில்வேனியாவில் இரும்பு தயாரிக்கும் நிறுவனங்கள், ஃப்ளோரிடா, ஜார்ஜியா, நியூஜெர்ஸியில் டீ தயாரிக்கும் நிறுவனங்கள், நியூயார்க்கில் தி பியெர்ரே ஹோட்டல், சான் ஃபிரான்சிஸ்கோவில் தாஜ் பாஸ்டன் மற்றும் தாஜ் காம்ப்டன் ப்ளேஸ் ஹோட்டல்கள், கலிஃபோர்னியாவில் அனிமேஷன் லேப்கள் மற்றும் கலிஃபோர்னியா, மிக்சிகன், ஓஹையோவில் ஐ.டி. வளர்ச்சி மையங்கள் என்று அமெரிக்காவில் டாடா நிறுவனங்களின் பட்டியல் நீள்கிறது.
60 ஆண்டுகளாக...
டாடா குழுமம் அமெரிக்காவில் கால் பதித்து 60 ஆண்டுகள் ஆகிறது. ஜாக்குவார் லேண்ட் ரோவர் வாகனங்கள், டெட்லே, குட் எர்த், மற்றும் எய்ட் ஓ'க்ளாக் காஃபி ஆகிய டாடாவின் பிராண்டுகள் அமெரிக்காவில் பிரபலமானவை.
இந்தியாவில் ஃபோர்டு
அதேபோல், அமெரிக்காவின் மிகப் பெரும் ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தன் கிளைகளை விரித்து, இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வருவதையும் ஜான் கெர்ரி குறிப்பிட்டார்.