சான் பிரான்சிஸ்கோ: ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் தொடர்பான சில காப்புரிமை ஒப்பந்தங்களை மீறியதற்காக பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
மற்றொரு பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை வாங்க மைக்ரோசாஃப்ட் முடிவு எடுத்ததைத் தொடர்ந்து, காப்புரிமை விஷயத்தில் சாம்சங் தில்லுமுல்லு செய்ய ஆரம்பித்து விட்டதாக அது குற்றம் சாட்டியுள்ளது.
காப்புரிமை ஒப்பந்தம்
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் காப்புரிமைகள் தொடர்பான ஒரு ஒப்பந்தம் மைக்ரோசாஃப்ட்டுக்கும் சாம்சங்கிற்கும் இடையே கடந்த 2011ல் கையெழுத்தானது.
ஒவ்வொரு விற்பனைக்கும்...
அந்த ஒப்பந்தத்தின்படி, இந்தத் தொழில்நுட்பத்துடன் விற்கப்படும் ஒவ்வொரு சாம்சங் போனுக்கும் ஒரு குறிப்பிட்ட கமிஷன் தொகையை அந்த நிறுவனம் மைக்ரோசாஃப்ட்டுக்குக் கொடுக்க வேண்டும்.
கொடிகட்டிப் பறந்த விற்பனை
இதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் உலகில் சாம்சங்கின் விற்பனை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. அதிலிருந்தே காப்புரிமை ஒப்பந்தத்தை சாம்சங் கொஞ்சம் கொஞ்சமாக மீற ஆரம்பித்து விட்டது.
நோக்கியாவை வாங்கிய மைக்ரோசாஃப்ட்
இந்த நிலையில் கடந்த 2013 செப்டம்பரில் நோக்கியா நிறுவனத்தின் உபகரணங்கள் மற்றும் சேவை வர்த்தகங்களை வாங்கப் போவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.
முற்றிலும் மீறிய சாம்சங்
இந்த இணைப்பையும் ஒரு சாக்காக வைத்து, காப்புரிமை ஒப்பந்தத்தை முற்றிலும் காற்றில் பறக்க விட்டு விட்டதாக மைக்ரோசாஃப்ட் குற்றம் சாட்டுகிறது.
நீதி வேண்டும்
சாம்சங்குடனான உறவைத் தொடர விரும்பினாலும், இந்தக் காப்புரிமை ஒப்பந்த மீறல் விஷயத்தில் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டேவிட் ஹோவர்டு தெரிவித்துள்ளார்.