டெல்லி: அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஐந்து முதல் பதினான்கு வயது வரை உள்ள சுமார் ஒரு கோடி குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
"உலகிலுள்ள குழந்தை தொழிலாளர்களில் ஒரு பெரும் பகுதியை இந்தியா தொடர்ந்து கொண்டுள்ளது. இதில் தலைநகர் தில்லியில் உள்ள குழந்தை தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதுடன் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் வேலை செய்கிறார்கள்" என குழந்தைகள் தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து செய்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"51 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் படிக்க வேண்டிய ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளனர். இந்த ஆய்வில் நாற்பத்தேழு சதவிகித முதலாளிகள் சட்டத்தை அறிந்திருப்பதாகவும் ஆனாலும் அது அவர்களை குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்துவதிலிருந்து தடுப்பதில்லை" எனவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்தது. குழந்தை தொழிலாளர்களை மீட்கும் நோக்குடன் செயல் படும் இந்த அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இதை வெளியிட்டது.
இந்த ஆய்வறிக்கை மூலம் குழந்தை தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அதாவது எழுபத்தைந்து சதவிகிதம் பேர் டீக்கடைகள், தாபா என்றழைக்கப்படும் உணவகங்கள் அல்லது சிறிய கடைகளில் பணிபுரிவதாகவும், ஏனெனில் இது போன்ற இடங்களில் பணி நெறிமுறைகள் குறைபாடுகள் முழுவதுமாக காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.