மும்பை: மத்திய அரசு துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தியதால் அடுத்த இரு வருடங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.5 சதவீதத்தை எளிதாக எட்டிவிடும் என மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதார்.
கடந்த ஞாயிறு கிழமையன்று மும்பை சசோன் துறைமுகத்தின் மேம்பாட்டு பணி திட்டத்தை துவக்கி வைத்த கட்கரி, இந்திய வளர்ச்சிக் குறித்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
சசோன் துறைமுகம்
துறைமுகம் என்ற உடனே பெரிய பெரிய கப்பல் எல்லாம் வந்து நிற்கும் இடம் என்று கணித்து விட வேண்டாம். சசோன் துறைமுகம் என்பது மும்பையில் மீன்பிடி படகுகள் வந்து நிற்கும் ஒரு சிறு துறைமுகம். இது துறைமுகம் மட்டும் அல்லாமல் அது ஒரு விற்பனை கூடமாகவும் உள்ளது. மேலும் மும்பையில் இத்தகைய பல சிறு சிறு துறைமுகங்கள் இருந்தாலும், சசோன் துறைமுகம் மிகவும் பழமையான ஒன்று.
மேம்பாட்டு திட்டம்
இந்த துறைமுகத்தில் மீன்பிடி படகுகளுக்கு தேவையான எரிபொருள், குடிநீர், ஐஸ் கட்டிகள் தேவை மற்றும் விநியோகத்தை பூர்த்தி செய்யவும், மேலும் நிறைய படகுகள் வந்து நிற்பதற்கும், புதிய தங்கும் அறை, உணவகம், விற்பனை கடைகள் ரேடியோ டவர் போன்றவற்றை அமைக்க சுமார் 25.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள்
மத்திய அரசு கடல் சார்ந்த போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செலவுகள் அதிகளவில் குறைக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேம்பாடுகள்
கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தவும், சீர்படுத்தவும், இத்துறை சார்ந்த முக்கிய திட்டங்களை முடுக்கிவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உணவு பிரியர்களை கவர கடல் உணவு பூங்கா மற்றும் உணவகத்தை இந்தியாவின் முக்கிய இடங்களில் அமைக்கவுள்ளது.
துறை சார்ந்த முன்னேற்றங்கள்
இத்தகைய துறை சார்ந்த முன்னேற்ற திட்டங்கள் அதிகளவில் அமல்படுத்தப்படுவதால் இந்தியாவில் அனைத்து துறைகளும் மேம்படும். மேலும் மொத்த இந்தியவின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உச்சத்தை அடையும். எனவே அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஜிடிபி 8.5 சதவீதத்தை கண்டிப்பாக எட்டும் என மத்திய அமைச்சர் நிதின் தெரிவித்தார்.