மும்பை: இந்தியத் தலைநகர் வேற எதுலையெல்லாம் முதல் இடமோ தெரியாதுங்க. ஆனால், அண்மையில் அசோசாம் அமைப்பு டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்திய ஆய்வில், மற்ற நகரங்களை விட டெல்லிவாசிகள் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் முதலிடம் பிடித்துள்ளனர் (பின்ன பெண்களுக்குப் பாதுகாப்பில்லைன்ன ஆன்லைன் ஷாப்பிங் பண்ணாம வேற என்ன பண்ண முடியும்!!).
நாட்டில் பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் குவிந்துள்ள நிலையில், இதன் சந்தை மற்றும் சந்தை மதிப்பு பெருகி கொண்டே வருகிறது. குறிப்பாக நகரவாசிகளிடம் இத்தகைய நிறுவனங்களின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. எனவே இந்தியாவில் எந்த நகரம் அதிகளவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடுகிறது என்ற ஆய்வு அசோச்சாம் நிறுவனம் நடத்தியது.
டெல்லி வாசிகள்
அந்த ஆய்வின் படி, 67 சதவிகித டெல்லிவாசிகள் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை விரும்புவதோடு, 23 சதவிகிதம் பேர் சரோஜினி மார்கெட், லஜ்பத் நகர், கரோல்பாக், ஜன்பத், பஹார்கஞ்ச், சதார் பஜார் மற்றும் சாந்த்னி சவ்க் போன்ற பழைய மார்க்கெட்டுகளில் வாங்குவதையே விரும்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஷாப்பிங் மால்
சுமார் 7 சதவிகிதம் பேர் பெரிய மால்களில் ஷாப்பிங் செய்வதையும் 3 சதவிகிதம் பேர் சிறப்பு அங்காடிகளில் வாங்குவதையும் விரும்புவதாக அந்த ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.
மும்பை 2வது இடம்
இதில் 60 சதவிகிதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்புவதைக் கொண்டு மும்பை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. துணிமணிகள், சிறு கருவிகள், புத்தகங்கள் மற்றும் சிறிய பொருட்கள் இதில் அடக்கம். ஆய்வின்படி, வரும் ஆண்டில், இது 65 சதவிகிதத்தை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஜூரம்
அகமதாபாத் நகரமும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் ஜுரத்தில் சிக்கியுள்ளது. 57 சதவிகிதம் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரைக் கொண்டு இது மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து விதமான பொருட்களும் இதில் அடக்கம்.