டெல்லி: மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரான அருண் ஜேட்லி ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு உதவு வகையில், இந்தியா நிறுவனங்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப முன்னாள் ராணுவ வீரர்களை பணியில் அமர்த்திக்கொள்ள வலியுறுத்தினார்.
இதன் மூலம் நிறுவனங்கள் இவர்களிடம் இருந்த சிறப்பான சேவையை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அருண் ஜேட்லி
"இந்திய நிறுவனங்களுக்கு பயிற்சி பெற்ற, ஒழுக்கமான பணியாட்கள் தேவை, இதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மிகவும் பொருத்தமானவர்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர்கள் மட்டுமன்றி ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள், கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக சேவையாற்றக் கூடியவர்கள்" என அருண் ஜேட்லி கூறினார்.
மறுவாழ்வு இயக்குநரக அமைப்பு
தொழில் துறை அமைப்பு CII, ராணுவம் இரண்டும் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மறுவாழ்வு இயக்குநரக அமைப்பு மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
ஒய்வு பெறும் அதிகாரிகள்
ராணுவத்தில் பணியாற்றுபவர்களில் அதிகமானோர் குறைந்த வயதிலேயே பணியில் இருந்து ஓய்வுபெற்று விடுகிறார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் சோர்வதில்லை, வாழ்க்கையில் அயராது முன்னேறத் துடிக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.
அனைத்திலும் ஒழுக்கம்
நாடு முழுவதும் ராணுவ முகாம்கள் உள்ள பகுதிகள் மற்ற இடங்களை விட சிறப்பான முறையில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன மற்றும் சாதாரண குடிமக்களின் கட்டிடங்களை விட ராணுவ வீரர்களின் கட்டிடங்கள் சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன, இதிலிருந்து ராணுவ வீரர்களின் சிறந்த முகாமைத்துவ நடைமுறைகளைப் பார்க்க முடிகிறது என ஜெட்லி கூறினார்.
60 ஆயிரம் பேர் ஓய்வு
எனவே தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவன சமூகப் பொறுப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னாள் ராணுவீரர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என ஜெட்லி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்தில் பணிபுரியும் சுமார் 60 ஆயிரம் பேர் ஓய்வு பெறுகின்றனர், இதில் 44% பேர் 40-50 வயதுக்கு உட்பட்டவர்கள், 33% பேர் 35-40 வயதுக்கு உட்பட்டவர்கள், மேலும் 12 சதவிகிதத்தினர் 30-35 வயதிலே பணியிலிருந்து விலகிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.