மும்பை: பொதுவாக தனியார் வங்கிகளும் சரி, பொது துறை வங்கிகளும் சரி கடன் பெற்றவர்கள் மீது கடனை திருப்பிச் செலுத்த பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கமான ஒன்று, சில வங்கிகள் லோக்கல் ரவுடிகளை வைத்துக்கூட மிரட்டுவதாகவும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது கடன் பெறுபவர்களை விட, அவர்களுக்கு உத்தரவாதம் அளித்தவர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பி செலுத்தாதபோது, அதற்கு உத்தரவாதம் தந்தவர்கள் திருப்பி செலுத்த வேண்டும், என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது காலம் காலமாக இருப்பது தானே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இப்போது கடனுக்கு உத்திரவாதம் அளித்த நபர்களுக்கும் கடுமையான நெருக்கடி கொடுக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
புது சிக்கல்
உத்திரவாதம் அளித்தவர்களிடம் கடனை திருப்பி செலுத்த பண வசதி இருந்தும், செலுத்தாதபோது, அவர்களும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களாக (விஜய் மல்லையா போல நாணயமற்றவர்) கருதப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
என்ன பிரச்சனை வரும்??
கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டு விட்டால், அவர்கள் மேலும் கடன்பெற முடியாது. எந்த நிறுவனத்திலும் இயக்குனர் பதவியும் வகிக்க முடியாது.
ரிசர்வ் வங்கி
மேலும் இத்தகைய நடவடிக்கை இந்தியாவின் அத்தனை பொதுத்துறை வங்கிகளும் கடைப்பிடிக்கும் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்படா சொத்துகள்
இந்திய வங்கிகளில் செயற்படா சொத்துகளின் அளவு கடந்த டிசம்பர் மாதம் 4.4 சதவீதமாக இருந்தது. இதனை கருத்தில் கொண்ட வங்கிகள் சொத்துகளை குறைக்க துவங்கின இதனால மார்ச் 2014ஆம் மாதம் அதன் அளவு 4.1 சதவீதமாக குறைந்தது குறிப்பிடதக்கது.
உஷார்
இனி யாருக்கும் வங்கி கடனுக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டாம். அதேபோல இதற்கு முன் உத்திரவாதம் அளித்து இருந்தால் அவர்களை சந்தித்து கடன் தொகை மீதம் எவ்வளவும் உள்ளது, எப்போது குறைக்க போகிறாய் என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். மீதமுள்ள கடன தொகையை விரைவில் செலுத்தும்மாறு அறிவுறுத்தவும்.