பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலகேனி அரசியலில் குதித்ததால் சில வருடங்களுக்கும் முன்பு நிறுவனத்தை விட்டு வெளியேறிய நாராயண மூர்த்தி மீண்டும் சீஇஓ-வாக நிறுவனத்திற்கு நுழைந்தார்.
இவர் வந்த நேரம், நிறுவனத்திடம் இருந்து பல ஒப்பந்தங்கள் உடைந்தது, அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தை கட்டிக்காக்கும் பொறுப்பில் இருந்த 14 உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு அடுத்தடுத்து வெளியேறினர். இதில் பலர் நாராயணமூர்த்திக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
சிக்காவின் என்டிரி!!
இப்படி பல பிரச்சனைகள் மத்தியில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு புதிய சீஇஓவாக, ஜெர்மானிய மென்பொருள் நிறுவனமான சாப் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய விஷால் சிக்காவை இன்போசிஸ் நிர்வாகம் கை கால்களில் விழாத குறையாக இந்நிறுவனத்தின் சீஇஓவாக உட்கார வைத்தது.
ஆகஸ்ட் 1
இந்த அறிவிப்பு ஜூன் 12ஆம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் அப்போதைய சீஇஓ-வான மூர்த்தி அறிவித்தார். ஆனால் விஷால் சிக்கா முறையாக நிர்வாக பொறுப்பில் உட்கார்ந்தது ஆகஸ்ட் 1ஆம் தேதி தான்.
100 நாட்கள்
அறிவிப்பு வெளியான ஜூன் 12ஆம் தேதியில் இருந்து 100 நாட்கள் ஆன நிலையில் விஷால் சிக்கா நிறுவனத்தில் பல மாற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக இந்தியாவை விடுத்து அமெரிக்கா, ஐரோப்பா, போன்ற நாடுகளில் நிறுவனத்தையும் நிர்வாக முறையையும் குறிப்பிடதக்க அளவு மாற்றியுள்ளார்.
பங்குகள் உயர்வு
இந்த 100 நாட்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 16.12 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் இத்துறையின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது இந்நிறுவனத்தின் அதிர்ஷ்டம்.
நண்பர்கள்..
இந்த 100 நாட்களில் சிக்கா தான் பணிபுரிந்த சாப் நிறுவனத்தில் இருந்து இரு முக்கிய அதிகாரிகளை இன்போசிஸ் நிறுவனத்திற்கு இணைத்துக் கொண்டார். மேலும் இவர்களுக்கு நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது.