விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்த பிறகு இம்மாநிலத்தின் வருவாய் அதிகளவில் குறைந்தது. இதனால் இம்மாநில அரசு வருவாய் அதிகரிக்க பல தரப்பட்ட முயற்சிகள் செய்து வருகிறது.
இதில் ஒன்று தான் ஆந்திராவில் தொழில்துறை துவங்குவது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஐ.டி. மற்றும் எலெக்ட்ரானிக் துறைகளில் சுமார் ரூ.42,000 கோடி முதலீடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி செய்தியாளர்களிடம் இது குறித்துக் கூறுகையில்,
ஐ.டி., எலெக்ட்ரானிக் ஹப்
ஐ.டி. மற்றும் எலெக்ட்ரானிக் துறைகளில் ஆந்திராவும் ஒரு ஹப்பாக உருவெடுக்கும். அதற்கான தகுந்த மற்றும் எளிமையான கொள்கைகளை ஆந்திர அரசு வகுத்து வருகிறது.
சிங்கிள் விண்டோ
சிங்கிள் விண்டோ முறையின் மூலம் இந்த இரு துறைகளையும் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரூ.42,000 கோடி முதலீடு
அடுத்த 5 ஆண்டுகளில் ஐ.டி. துறையில் ரூ.12,000 கோடியும், எலெக்ட்ரானிக் துறையில் ரூ.30,000 கோடியும் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
9 லட்சம் பேருக்கு வேலை
இத்தகைய பெரும் முதலீட்டின் மூலம் இவ்விரு துறைகளிலும் சுமார் 9 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
விப்ரோ, டெக் மஹிந்த்ரா
விப்ரோ, டெக் மஹிந்த்ரா உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்கள் ஆந்திராவில் தங்கள் அலுவலகங்களைத் திறக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
4 நகரங்களில்...
மேலும் இந்திய மற்றும் உலக நாடுகளுக்கும் ஆந்திராவில் நிறுவனங்களை அமைக்க அழைப்பு விடுத்துள்ளோம். இதற்காக விசாகப்பட்டினம், காக்கிநாடா, திருப்பதி மற்றும் அனந்தப்பூர் ஆகிய நான்கு இடங்களில் நிறுவனங்களை அமைக்க இடங்களை கண்டறியப்பட்டுள்ளன என்றார் ரெட்டி.