மும்பை: அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் 5 ஆண்டு பத்திர கொள்முதல் திட்டம் புதன்கிழமை முடிவடைந்த நிலையில் இந்திய சந்தையில் அதிகப்படியான முதலீடு குவிய துவங்கியுள்ளது. இதன் மூலம் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளது, இன்று காலை வர்த்தகம் துவங்கிய முதல் உயர்வுடனே இருந்தது வருகிறது.
சரியாக 12 மணியாளவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 27,754 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தை தொட்டது. அதேபோல் நிஃப்டியும் 111.25 புள்ளிகள் உயர்ந்து 8,280 புள்ளிகளை அடைந்து புதிய சாதனைகளை படைத்துள்ளது இந்திய வர்த்தக சந்தைகள். இன்னும் சில மாதங்களில் சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை எட்டிவிடும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய துறைகள்
மும்பை பங்கு சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஐடி, சுகாதாரம் மற்றும் கேப்பிடல் கூட்ஸ் ஆகிய துறைகளின் வர்த்தகமும் 1.49 சதவீத வளர்ச்சியில் மிகவும் சிறப்பாக உள்ளது.
30 சென்செக்ஸ் குறியீட்டு
சந்தையின் 30 சென்செக்ஸ் குறியீட்டில் இன்போசிஸ், டாக்டர் ரெட்டி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஐடிசி, எல்&டி. மஹிந்திரா & மஹிந்திரா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் மற்றும் எஸ்.பி.ஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஆசிய சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் ஆசியா சந்தைகள் அனைத்தும் உயர்வுடனே இருந்தது. இந்நிலையில் ஜப்பான் நிக்கி 1.68 சதவீத வளர்ச்சியும்,. ஹாங்காங் சந்தை 0.89 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது.
30,000 புள்ளிகள்
மேலும் அடுத்த 3 முதல் 5 மாதங்களில் சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை எட்டும் என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் நிஃப்டியும் 8500 புள்ளிகளை கண்டிப்பாக எட்டிம் எனவும் தெரிவித்துள்ளனர்.